
இயற்கையே! என்ன தவறு செய்தோம்.? ஏன் இவ்வளவு கொடுரமாய் கொன்று குவிக்கிறாய். வாள்போர் நடக்கும் போது உயிரை இழந்தோம் ஆனால் உடமையை இழந்ததில்லை. குண்டுமழை பொழிந்த போது பதுங்கு குழியில் படுத்து எங்களைப் பாதுகாத்துக் கொண்டோம். ஆனால் இயற்கை எழும்பி வரும் போது எங்களால் எதுவும் செய்யமுடியாமல் நீ தின்று தீர்த்துவிட்டு திசைமாறிப் போனபிறகுதான் எங்களையே நாங்கள் பொறுக்கிக் கொள்ளமுடிகிறது. உயிருடனோ! அல்லது பிணமாகவோ!
இயற்கைதான் கடவுள் என்று எங்களுக்குத் தெரியாமல் எங்கள் வசதிக்காய் இயற்கையை அழிக்க நினைக்க, தங்கள் வசதிக்காய் இயற்கையை அழித்தவர்களை வாய்ப்பு வரும் பொழுது இயற்கை வாய்க்கரிசி போட்டு வழிஅனுப்பி விடுகிறது. நெருப்பு கிளம்பிவரும்போது சுடுகாடு தேவையில்லை. வாரிசுகள் கொள்ளி வைக்க அங்கு வாய்ப்பும் இல்லை. நெருப்பே நின்று அவர்களுக்கு இறுதிச்சடங்கை எடுத்துச் செய்து விடுகிறது.

காற்றும், புயலும், இடியும், மழையும் எழும்பி வரும்போது இடுகாடு தேவையில்லை. இறுதி மரியாதைக்கு அங்கு வேலையில்லை. கண்மூடுமுன் அவர்களை மண் மூடிவிடும். இயற்கையை வெல்ல நினைத்தார்கள் பின்பு பேராசையால் அதனைக் கொல்ல நினைத்தார்கள். பொறுத்துப் பார்த்த இயற்கை பொறுக்க முடியாமல் பொங்கிஎழுந்து உயிர்களைப் பழிவாங்கும் பொறுக்க முடியாத செயல்தான் சுனாமி, புயல், வெள்ளம் என்று வேறு வேறு முகங்களாக வந்து பேரழிவுகளைத் தந்துவிட்டுச் செல்கிறது. இதனால் பூமிகுலுங்குகிறது. உயிர்கள் அழிகிறது இயற்கை சிதைகிறது. நேற்றுவரை ஊராக இருந்தது இன்று காடாகிறது. காடாக இருந்தது இப்போது கடலாகத் தெரிகிறது. இயற்கையின் மாற்றத்தாலும் சீற்றத்தாலும் மனித இனங்கள்தான் மறைந்துபோகிறது. இயற்கையின் சீதனம், இறைவனின் இல்லம் என்று பெருமையாகப் பேசப்பட்ட கேரளாவில் உள்ள வயநாடு இன்று இருந்த இடம் தெரியாமல் இடம்பெயர்ந்து விட்டது. இயற்கையே அவற்றை விழுங்கிவிட்டது. அவ்வூர் பலமுறைப் பழிவாங்கப்பட்டு இன்று தடயங்கள் இல்லாமல் தரைமட்டமாகி விட்டது.
இன்று நேபாள நாட்டை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. கண்முன்னால் கலர்கலாராய் தெரிந்த நேபாளநாடு பனிமலை உருகி வெள்ளப் பெருக்கு வந்து வீடுகளை விழுங்கிக்கொண்டு இருக்கிறது. உடமைகளை எல்லாம் உருட்டி எடுத்து, மண்ணுக்குள் ஒளித்து வைத்து, மயானக் காடாய் மாற்றி அமைத்தது. ஐயோ, அம்மா என்ற அலரல்! அந்த ஒலி கேட்கக்கூட காதுகள் இல்லாமல் பொழுது விடிவதற்குமுன் அவர்களது அழுகைதான் அடங்கிப் போகிறது.

இப்போது இயற்கை இமயமலையிலிருந்து அதாவது இறைவனின் பாதத்திலிருந்து சீறிக் கொண்டு வந்துள்ளது. அங்கிருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதிகள் இறங்கி வந்து போடேகோஷி நதியில் கலந்து அது வெள்ளப்பெருக்காகி நாட்டின் நடுவே புகுந்து எட்டு மாவட்டங்களை இரையாக்கிவிட்டது. ஏறக்குறைய 2000 பேர் இறந்தும் 5000க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள்? என்று தெரியாமலும். இனம் புரியாமலும் இரலும் பகலும் கழிகிறது.
உடைகள் கிழிந்து தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நேபாளத்தில் ஆங்காங்கு உடல்கள் கிழிந்து தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் உள்ளுர் மக்கள் மட்டுமல்ல உலக நாடுகளிருந்து யாத்திரை வந்தவர்களுக்கு இப்போது இறுதி யாத்திரை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீட்புப் பணியில் பலர் இருந்தும் வெள்ளப் பெருக்கு இன்னும் அவர்களை விடாமல் இன்னும் மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆண்டவா! மழையை நிறுத்து அந்தமக்களின் பாவத்தைப் பொறுத்து!.

தென் தமிழகத்திலிருந்து சாமியைத் தரிசிக்கச் சென்றவர்கள் என்ன தவறு செய்தார்கள்? வா வடக்கே என்று அவர்களை வரவழைத்து வாழக்கையை முடித்து விட்டரா கடவுள்? அந்தக் கடவுளுக்கே கண் இல்லையா? அல்லது இந்தக் கலவரத்திற்கு அவர் பொறுப்பில்லையா? இயற்கை கொதித்து வரும்போது கடவுளுக்கு தடுக்கச் சக்தியில்லையா? அல்லது அதற்கு வழி இல்லையா?
ஒரே வீட்டில் 26பேர் மொத்தமாக இறந்து கிடந்தார்கள் என்ற செய்தி நெஞ்சை உருக்கிவிட்டது. தண்ணீரே உனக்கு ஏன் உயிர்களின்மீது இவ்வளவு தாகம்.? ஓடமுடியவில்லை, ஒளியமுடியவில்லை. மரண ஓலக்குரலை கேட்கவும் ஆளில்லை. சத்தமே இல்லாமல் ஒருசரித்திரம் சமாதியாகிவிட்டது.

ஊருக்கு ஒருபிணம் விழலாம். ஊரே பிணமானால் யார்தான் எடுத்துப் புதைப்பது? அதனால்தான் கடவுளே நீயே நீரை வைத்து மூடிக்கொண்டாயோ,? எத்தனை பணக்கரார்கள் இன்று வேறு உடைமாற்ற முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஊருக்கே உணவு கொடுத்த குடும்பம் ஒரு நேர உணவில்லாமல் தவிக்கிறது. தவம் இருந்து பெற்ற ஒரே மகனை தண்ணீர் தன்கண்முன்னே அள்ளிக்கொண்டு போகும் போது தடுக்க முடியாமல் தவித்த தவிப்பை எவரிடம் சொல்வது? எங்கேபோய் முட்டுவது? எந்தக் கடவுளின் கதவைத் தட்டுவது? புரியமால் தவிக்கிறார்கள். சிலர் புதைகுழியில் கிடக்கிறார்கள். கடவுளே கருணை இல்லையா?
ஆயிரக்கணக்கானோர் ஆளில்லாமல் அடக்கம் பண்ணப் பட்டிருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தால் இயற்கை எய்தி இருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு எதிர்காலம் இருளுக்குள் மூழ்கிவிட்டது. குடும்பங்கள் பல குலைந்து கிடக்கிறது. உறவுகள் பல உயிர்களை இழந்து தவிக்கிறது. மடியில் இடிவிழுந்து, மரண ஒலியில் தேசியகீதம் பாடி ஏற்றிவைத்த கொடிகள் இடையில் நின்று, துக்கத்திற்காகப் பறக்கிறது என்ற துயரச்செய்தி கேட்கிறது. என் வீடு, என் உடமை என்றதெல்லாம் மண்ணோடு மண்ணாகி விட்டது. நேபாளநாடு வரைபடத்திலிருந்து சற்றுவெட்டி எடுக்கப்பட்டு விட்டது. வருகின்ற தலைமுறைகளின் கருவறைகள் சிதைக்கப்பட்டுவிட்டது. பூ உதிரலாம், பிஞ்சு, காய், கனி என்று கணக்கற்று காணாமல் போய்விட்டது.

இறைவா! ஏன் எங்களை காக்கவில்லை.? தவறு செய்கிறவர்களுக்கு இந்தத் தண்டனை என்றால் குழந்தைகளுக்கு ஏன் இந்தக் கொடூரத்தண்டனை.? இரக்கமில்லாத கடவுள் இருக்கிற இடத்தில் இமயமலை கொஞ்சம் இறங்கிவந்து இந்த இறப்புச்செய்தியை எழுதிவிட்டுப் போயிருக்கிறது. இறைவா உன்னால் என்ன செய்யமுடிந்தது.? எங்கள் காணிக்கை எல்லாம் வாங்கிக்கொண்டு காலனை ஏவிவிட்டு இருக்கிறாய்.! உனக்கு கருணை இல்லையா? இல்லை நீ கடவுள் இல்லையா?
இனிவரும் தலைமுறைக்கு இந்த நேபாள நாடு இருந்தது தெரியுமா?, இறைவா கதையினைச் சொல்லத்தான் இந்தக் காரியத்தை செய்தாயா? ஆனால் ஒன்றுமட்டும் உறுதி இயற்கை எழுதும் இந்த இறுதி தீர்ப்பை யாரும் மாற்றி அமைக்க முடியாது. இதற்குள் எதற்கு நமக்குள் ஏற்றத்தாழ்வுகள்? எதற்கு இந்த ஆட்டம் பாட்டங்கள்? எல்லாம் தலைகால் தெரியாமல் ஆடியவர்கள் எல்லாம் இப்போதுதலையும் தெரியாமல் காலும், தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்களே! இனிமேலாவது புத்திவருமா?.

கடைசியில் ஒன்றுதான், கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல. கையிருந்தால் கூடப் போதும் உழைத்துப் பிழைத்துக் கொள்ளலாம். நேபாள நாடு இனி என்று நிமிர்ந்து நிற்கப்போகிறது?. அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து வைத்தவர்கள் இன்று அடுத்த வேளை உணவுக்குத் தடுமாறுகிறார்கள். மாடமாளிகையில் இருந்தவர்கள் இப்போது வீட்டைத் தேடி அலைகிறார்கள். விதவிதமாக உடையணிந்தவர்கள் இன்று கிழிந்த உடைகூட கிடைக்காமல் தவிக்கிறார்கள். மண்ணில் பார்க்கும் இடம் எல்லாம் சொத்தாகக் குவித்தவர்கள் இன்று சொத்தெல்லாம் மண்ணாகி சோகமாய்த் திரிகிறார்கள். ஐயோ. இது அங்குமட்டுமல்ல இந்தியாவிற்கும் இயற்கை இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இயற்கையின் அடுத்த இலக்கு இந்தியாதான். இங்கு பாவங்கள் மலிந்து விட்டதால் தீர்ப்புகளும் கண்ணுக்கு தெரியும் தூரத்தில்தான் இருக்கிறது. இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம் கதையும் இப்படித்தான் முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆகவே ஓரு நிமிடம் சிந்திப்போம். இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கை நமக்கு பிறரை வாழவைக்க…. பிறருக்கு வழிகாட்ட…. பிறருக்கு ஆறுதல் அளிக்க….. என்பதனை உணர்ந்து வாழ்வோம். கல்லறைக்குப் போகும் நாள் நம் காலடியில்தான் இருக்கிறது. ஆகவே நம் பாதங்களின் பயணங்கள் பிறருக்குப் பாதையாகட்டும். பாதுகாப்பளிக்கட்டும். பயனுள்ளதாய் அமையட்டும். பயணம் தொடர்வோம் பாசத்தை விதைத்துக்கொண்டு……..
“இயற்கையே…
எதிர்த்துவிட்டால்…….
இறைவனால் என்ன
செய்யமுடியும்?”