
சரியானதைச் சரியாகச் செய்யாமல், தவறானதைச் சரியாகச் செய்து அதுதான் சரி என சாதிக்கும் சமுதாயம். சரியானதைத் தவறு என்று இத்தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கும் கலிகாலத்தில் கடவுள் ஏது? சட்டம் ஏது? சம்பிரதாயம் ஏது? நீதி ஏது? மனசாட்சி ஏது? எல்லாமே இங்கு வலுவுள்ளவன் வகுத்தது என்ற வாழ்க்கைப்பாடம் அல்லவா இங்கு வரலாறாகிக் கொண்டிருக்கிறது.!
1.மனிதன் வளமாக வாழ இயற்கைச் செல்வம் இன்றியமையாதது. இயற்கை வளங்களைக் காக்கக் காக்க இயற்கை நம்மை காக்கும் என்ற இயற்கை நியதியை இழந்துவிட்டு, காடுகள் நமக்கு கடவுள் போன்று நம்மை காக்கும் தெய்வம் எனத் தெரிந்திருந்தும். அந்தக் கடவுளையே அழிப்பது கலியுக முரணல்லவா.!
2.கோவில்கள் என்பது எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை எல்லோரும் சேர்ந்து கும்பிடும் இடமாகும். ஆனால் இன்று கோவில்களால்தான் பிரச்சனைகள் வருகிறது. வழிபாடுகளால்தான் கலவரங்கள் வெடிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மதம் பிடிக்கும் போது யானையை விடக் கேவலமாக நடந்து கொள்கிறான். அப்படியென்றால் மதங்களும், கோவில்களும் வழிபாடுகளும் எதற்கு? மனிதனை செம்மைப்படுத்தாத மதங்கள் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? இது முற்றிலும் முரணாக இருக்கிறதே.!

இந்தியா ஒரு ஏழை நாடு. ஒவ்வொரு மனிதன் மீதும் எவ்வளவோ கடன் இருக்கிறது என்று ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்திலும் நிதி அமைச்சர்கள் வாசிக்கும் போது எண்ணற்ற செல்வங்களை குவித்து வைத்திருக்கின்ற பணக்காரர்கள் இங்குதானே வாழ்கிறார்கள்! அவர்கள் இந்தியாவில் இல்லையா? அல்லது அவர்களுக்குள் இந்தியா இல்லையா?
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் இன்றும் தன்னிறைவு அடையாத கிராமங்கள் அதாவது அடிப்படை வசதிகளைக் கூடப் பெறாத கிராமங்களும், பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் அன்றாடம் அல்லலுறும் போதும் இந்தியாவில் உள்ள கோவில்களும் சிலைகளும் பளிங்கு கற்களால் அமைக்கப்படுவது பொருத்தமாக இல்லையே! குடிசை அழிகிறது. கோவில்கள் பெருகுகிறது. இங்கு வசிக்காத கடவுளுக்கு வாழ்விடம் எதற்கு?.

கல்வி என்பதே மொழி வளர்ச்சிதான் என்பதைத் தெரிந்திருந்தும் தமிழ் வழிக் கல்விகள் குறைந்து ஆங்கில வழிக்கல்விகள் ஆங்காங்கே காளான்களாய் அவ்வப்போது முளைத்துக் கொண்டிருப்பதன் அவசியம் என்ன? தமிழ்மொழி உங்கள் பார்வையில் தரம்கெட்டதா?
இலவசக் கல்வியை இந்தியா வழங்கிக் கொண்டிருக்கும்போது ஏழையாய் இருந்தாலும் காசு கொடுத்துக் கல்வி கற்கத் துடிக்கும் பாமரனின் அவசியம் என்ன? அவசரம் என்ன?

ஒவ்வொரு பெற்றோர்களும் தனது மகன் இந்தியாவில் அரசுப்பதவியில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளியை மட்டும் ஏன் எட்டிக்காயாய் எட்டி உதைக்கிறார்கள்? பிள்ளைகளை அப்பள்ளியில் சேர்ப்பதே அவமானமாக நினைக்கிறார்களா?
கல்வி வந்த பிறகு நமக்குக் கட்டுக்கோப்பான வாழ்வு வரும் எனக் கனவு கண்டோம். ஆனால் பள்ளிகள் பெருகப்பெருக குற்றங்களும் கொடிகட்டி பறக்கிறதே. நாம் செய்த குற்றம்தான் என்ன? சாதிப்பிரச்சனை, மதக் கலவரம், தற்கொலைகள், பாலியல் சீண்டல்கள் எனப் பலதரப்பட்ட பாவங்கள் அரங்கேறுகிற இடம்தான் பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளியால் நாம் அடைந்த பக்குவம்தான் என்ன?

குடிப்பவர்கள் எல்லாம் ரோட்டில் குப்புற விழுந்து கிடக்கும் போது படிக்கிறவர்கள் மத்தியில் வந்து போதை விழிப்புணர்வு பற்றி போதிக்க வேண்டிய அவசியம் என்ன?
இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பதனை நாட்டு மக்களுக்கு வழங்காமல் அதனை தனியாரிடம் தாரை வார்த்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வீதி தோறும் டாஸ்மார்க் கடையைத் திறந்துவிட்டு பண்டிகை நாட்களில் விற்பனைக்கு எல்லை நிர்ணயித்து விற்றுத்தீர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தது போல் வியாபாரத்தை பெருக்கி விட்டு பள்ளிக்கூடம்தோறும் போதை விழிப்புணர்வு பணியைச் செய்வது பொருத்தமற்ற செயலாகத் தெரியவில்லையா?.

துறவிகள் எல்லாம் இருந்து உண்ணும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தங்களின் எளிமை, தோழமை, தொண்டுள்ளதோடு பொதுமக்களைத் தேடி வந்து நல்வழிப்படுத்த பிறருக்காக வாழ்ந்தவர்கள். ஆனால் இந்தத் துறவிகள் தனக்கென ஒரு ராஜாங்கம் அமைத்து, வேண்டிய வசதிகள் எல்லாம் செய்து கொண்டு, பொதுமக்கள் தேடி வந்தாலும் காண முடியாத வரம்புகளை வகுத்துக் கொண்டு, புண்ணியப் பணியினை விடுத்து பல்வேறு அதிகாரம், பணம், அந்தஸ்துப் போதையில் இருப்பது பொருத்தமாக இல்லையே!
ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காகத் தொண்டு நிறுவனம் அமைத்து பல்வேறு இடங்களில் பொருட்களைத் திரட்டி தனது வசதிக்காக வைத்துக் கொண்டு தன்னல வள்ளல்கள் போல் தனக்காகச் சகல வசதிகளுடன் வாழ்வது சகிக்க முடியவில்லையே!

அன்றாடக் கூலிக்காய் உழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிற ஆட்டோக்காரன், பிரசவத்திற்காக துடித்துக் கொண்டிருக்கிற பெண்ணை தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மருத்துவமனையில் சேர்த்து விட்டு நிம்மதியாக திரும்பும் போது, அவன் ஆட்டோவில் எழுதி இருந்தது பிரசவத்திற்கு இலவசம் என்று. ஆனால் இது எழுத வேண்டியது ஆட்டோவில் அல்ல. மருத்துவமனையில் அல்லவா! எழுதியிருக்க வேண்டும். ஏழை இரக்கப்படுவான். பணக்காரன் பணம் பறிப்பான், இது பரிதாபமாக இல்லையா? இல்லை பார்ப்பதற்கு அசிங்கமாக இல்லையா?
நம் நாட்டில் பார்வை இழந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிகள் கொடுத்தால் பார்வை பெறுவார்கள். ஆனால் ஒரு நாளில் இறப்பவர்கள் மட்டும் கண் தானம் செய்தாலே போதும் எல்லோரும் பார்வை பெற்று விடுவார்கள் என்று தெரிந்திருந்தும் விழிப்புணர்வு இல்லாமல் அவர்கள் விழியும் பெறாமல் இருப்பது பொறுத்துக் கொள்ள முடியவில்லையே!
விழி இழந்தவர்கள் வீதியில் ஒரு ஓரமாக யார் துணையும் இன்றி பயணித்துக் கொண்டிருக்கும் போது, விழி உள்ளவர்கள் நாள்தோறும் எண்ணற்ற வாகன விபத்துகளைச் சந்தித்து செத்துப் போகிறார்களே இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா.! வுpபத்தில் இறப்பவர்கள் எல்லாம் விழிகள் உள்ளவர்கள்தானே!

பிச்சை எடுத்தாவது ஒரு குழந்தையைப் படிக்க வைத்து விட்டால் வேலை வாங்கிப் பிழைத்துக் கொள்வான் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது நல்ல வேலைக்கு போயும் லஞ்சம் வாங்க பிறரிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது பெரும் பிழை அல்லவா.
ஊரைச் சுற்றிக் கிடக்கிற விறகினைப் பொறுக்கி வந்து வசதியாய் அடுப்புக் கூட்டி வேண்டியதைச் சமைத்து சாப்பிட்ட மக்களுக்கு சிலிண்டர் வழங்கி அதையும் கொடுக்க முடியாமல் சிக்கலில் சிக்க வைத்திருப்பது சிந்திக்கத் தெரிந்தவருக்குச் சிரமமாக இல்லையா? அல்லது உங்களுக்குச் சிந்தனையே இல்லையா?.

வாழ்க்கை முழுவதுமே முரண்பாடுகள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. தானேபோய் பலவற்றில் தலையை கொடுத்து தள்ளாடிக் கொண்டிருக்கிறோம். சுயபுத்தி, சுய சிந்தனை இருந்தால் மட்டுமே இங்கு சொர்க்கத்தைக் காணலாம். ஆசைகளுக்குத் தீனி போடாமல், விதியே என்றும் வாழ்ந்து விடாமல் புத்தியைப் பயன்படுத்தி புதிய வாழ்வு அமைப்போம்.
முடிந்தவரை பிறருக்காய் உழைப்போம். ஒருமித்த மனதுடன் பிறரைப் புரிந்து பெருமைப்பட வாழ்வோம்.
“சாகும்வரை – நாம்
சமாதானமாய் இருப்போம்.”