
நாட்டுப்பற்று என்பது ஏட்டிலும், பாட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் எல்லா இடங்களிலும் பட்டுத்தெறிக்கும் பழைய பஞ்சாங்கங்கள். நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து நாடு சுகமாய் வாழப் பிணமாய்ப் போனவர்களும் உண்டு. இந்த நாட்டையே பிணமாக்கி நாம் மட்டும் வாழ வேண்டும் என்று நாட்டையே நாசமாக்கியவர்களும் உண்டு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து எவருக்கும் பயனில்லாமல் பூமிக்குப் பாரமாய் சாமிக்குத் தூரமாய் வாழ்ந்து மறித்தவர்களும் இங்கு உண்டு.
நாம் இந்தப் பூமியில் வாழ்கிறோம். அந்தப் பூமியை நாடு என்று சொல்லி அதன்மீது பற்று வைத்து அதற்கு யாராவது பாதிப்பை ஏற்படுத்தினால் அவர்களோடு முரண்பட்டு நிற்கிறோம் முட்டி மோதி சண்டையிடுகிறோம். தான் இருக்கின்ற பூமியை நாடு என்று வைத்து அதன் மீது தீராத பற்றுக் கொண்டு செயல்படுபவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஜப்பானியர்கள். சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் தன்நாடு உலக நாடுகளால் உற்றுப்பார்க்கப்பட வேண்டும் என்று நினைத்துப் பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் உலக நாடுகளுக்குத் தன்னுடைய இருப்பைத் தெரியப்படுத்துகின்றன. சில நாடுகள் விளையாட்டின் மூலம் அவற்றில் அடையும் வெற்றியின் மூலம் தன்னுடைய நாட்டின் இருப்பைப் பதிவு செய்கின்றன.

உலக நாடுகளில் சீனாவும் இந்தியாவும் மற்ற நாடுகளைவிட வேறுபட்ட நாடுகள். உலக அளவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள் இது. இதில் சீனா கம்யூனிசத்தையும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் பெயர் பெற்றுள்ளது. சீனா மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நாடு. இருப்பினும் சீனா பல்வேறு கண்டுபிடிப்புகளிலும் தனது நாட்டினை வளர்த்தெடுத்து மெருகேற்றுவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. அது நமக்கு அண்டை நாடாக இருப்பதால் அவ்வப்போது முட்டல்களும், மோதல்களும் ஏற்பட்டு இடையிடையே பல இடங்களை நாம் இழந்து கொண்டே இருக்கிறோம். மொத்தத்தில் சீனாவோடு நம்மை ஒப்பிடும்போது எந்த வகையிலும் அவர்களுக்கு நாம் ஈடாக முடியாது.
குட்டி நாடுகள் பல தனது கெட்டிக்காரத்தனத்தால் உலகில் எட்டிய தூரம் பாய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாடு எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் பல்வேறு விளையாட்டுகளில் நாங்கள் சப்பாணி என்று தான் சரித்திரம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட உலகையே மிரட்டிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியில் குட்டி நாடுகள் கூட குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருக்கும்போது இந்தியா மட்டும் எல்லோராலும் காரித்துப்பப்பட்டது. இவ்வளவு பெரிய நாடு இருந்து என்ன பயன்?

உலகில் அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியாதான். ஆனால் நாட்டுப்பற்று என்றால் என்னவென்று தெரியாமல் நடிகர்களை குலதெய்வங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எதன்மீதும் பற்றுள்ளவர்களாக இல்லாமல் பைத்தியமாகத் திரிகிற இளைஞர்கள் இங்கு அதிகம். புதிய புதிய கண்டுபிடிப்புகளில் உலகம் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும்போது நமது இளைஞர்கள் மட்டும் போதைப் பொருள்களில் புதைந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் பற்றைக் கற்றுத்தர வேண்டிய அரசியல்வாதிகள் ஊழல் பெருச்சாளிகள் ஆகி நாட்டையே ஒட்டைபோட்டு நாசமாக்குகிறார். எங்கள் அரசியல்வாதிகளின் அடையாளமே வெள்ளை உடை அணிந்திருப்பார்கள் ஆனால் நாட்டைக் கறைபடுத்தி நாசமாக்குவார்கள். சாதி, மதத்தை வளர்த்து மக்களை அழிப்பார்கள். சமத்துவம் பேசிக்கொண்டே ஏற்றத்தாழ்வை விதைத்து எளியவனை அழிக்க ஏமாளிகளை ஏவிவிடுவார்கள். பக்தியை வளர்க்க மனித இரத்தம் குடிப்பார்கள் இதுவா ஜனநாயகம், இதுவா நாட்டுப்பற்று? வெட்கக்கேடானது எனது நாடு!
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால் அது தற்போது செத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் நாடி நரம்பு இளைஞர்கள் என்றால் அது நரம்புத்தளர்ச்சியால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இளைஞர்களுக்கும் நமது விவசாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஏன் போனது? நமது இளைஞர்களுக்கு எல்லாம் பிடித்தமான வேலை ஐவு நிறுவனங்கள். அது கூலி அதிகமாகக் கொடுக்கிறது என்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் கூனிக்குறுகிக் கொத்தடிமையாய்க் கிடக்கிறார்கள். பிறப்பால் இந்தியனாகவும், பிழைப்பிற்காக வெளிநாட்டுக் கலாச்சாரத்தோடும் இரண்டும் கெட்டான் போல் இழிந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் நாட்டிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இளைஞர்கள் எதற்கும் பயனற்றவர்கள் என்ற நோக்கில் கரப்பான் பூச்சி என்று அவர்களைக் கடிந்து கொள்கிறார்கள். இதனைக் கேட்ட இளைஞர்களுக்கு ரோசம் வந்து இப்போது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டார்கள். கரப்பான் பூச்சி என்று ஏளனமாகப் பேசியதால் இளைஞர்களுக்குக் கொஞ்சம் எழுச்சி வந்து அங்காங்கே இளைஞர்கள் எழ ஆரம்பித்துவிட்டார்கள். தன்னுடைய உரிமைகளைக் கேட்கத் துணிந்து விட்டார்கள். கிடைக்காதபோது இப்போது போராட ஆரம்பித்து விட்டார்கள்.
நாட்டோடு எந்த நட்புறவும் இல்லாமல் இருந்து இப்போது தன்னுடைய உரிமைகளையே போராடி வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதுவும் வட இந்தியாவைப் பாருங்கள் இளைஞர்கள் உரிமைக்காய் இரத்தம் சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை கண்ணெதிரே அனுபவிக்கிறார்கள். பிறர் மீது அடி விழாமல் சக மாணவ மாணவிகளுக்காக அடி, உதை வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்! ஏன் சிலர் உயிர் தியாகம் கூட செய்து கொண்டிருக்கிறார்.

தெற்கே இளைஞர்கள் தெருவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். தியேட்டரில் குத்தாட்டம் போட்டு, கூடிக்கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சக இளைஞர்கள் அங்கு தனது உரிமைக்காய் குரல் கொடுத்து உதை வாங்கிக் கொண்டு இருக்கும்போது இங்கு மானங்கெட்ட இளைஞர்கள் சமுதாயம் குத்தாட்டம் போட்டு கூறுகெட்ட தலைமுறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது.
எங்கே உயிர் பெறும் என் இளைஞர் கூட்டம்? போதையில் புதைந்து புதைகுழியில் விழுந்து செத்துப் பிணமாய் சிந்தை இழந்து கிடக்கும் இளைஞர்கள் எப்போது தெளிவடைவார்கள்?
கூத்தாடிகளைத் தலையில் தூக்கி வைத்து கூத்தாடும் இந்தத் தறிகெட்ட கூட்டம் என்று, தன்நிலை உணர்ந்து தன் தவற்றை தெரிந்து கற்றவர்கள் மற்றவர்கள் வாழ வழி செய்ய என்றைக்குத் தன் தவற்றை இந்த இளைஞர் கூட்டம் உணரப் போகிறது?

ஆளுக்கொரு அலைபேசியை தடவிக் கொண்டே அகக் குருடாகி விலை உயர்ந்த வாகனங்களை தன் பெற்றோர்களையே மிரட்டி வாங்கிக் கொண்ட அயோக்கியர்களான இந்த இளைஞர்கள் கூட்டம் என்று உழைக்கப் போகிறார்கள்? உழைத்துப் பிழைக்கப் போகிறார்கள்.
தவமிருந்து பெற்ற குழந்தைகள் எல்லாம் தறிகெட்டுத் திரிந்து யாருக்கும் அடங்காமல் விபத்து, ஆபத்துகளில் சிக்கி உயிரிழந்து நடை பிணமாய் கிடக்கும் எம் இளைஞர்கள் உயிர்த்தெழப்போவது எப்போது?
இறைவா எப்போது எங்கள் இளைஞர்களுக்காக ஒரு மீட்பர் வரப்போகிறார்? இவர்களை எப்போது அவர் மீட்டெடுக்கப் போகிறார்? கலங்கிய கண்களுடன் உலகமே காத்திருக்கிறது விடியல் எப்போது? விரக்தியில் பெற்றோர்களும்! பெரியோர்களும்!
“ஜனநாயகம்
பிண நாயகமாகி
சவக்குழியில் கிடக்கிறது
உயிர்ப்பு எப்போது?”