
வாழ்க்கை என்பது ஒரு பயணம். வாழ்க்கை முழுவதுமே பயணம், கருவறை தொடங்கி கல்லறை வரை இடைநில்லாப் பயணம், கல்வியைத் தேடி, வேலை தேடி, உறவைத் தேடி, விழாக்களைத் தேடி, தெய்வத்தைத் தேடி, நிம்மதி தேடி, ஏதோ ஒரு தேடல் தான் வாழ்க்கைப் பயணம். இந்தத் தேடல்கள் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை மறைத்து வைத்து எடுத்து எடுத்துக் கொடுக்கிறது.
இது நாம் திட்டமிடாத பயணம்தான். அதுவே நம்மைத் தேடி வந்ததா! அல்லது எதையோ நாம் தேடிப்போகிறோமா? என யாரிடமும் சொல்லமுடியாத பயணம் அடுத்த நொடியில் என்ன நடக்கப் போகிறது என்று கணிக்க முடியாமல் கல்லறையை நோக்கிய பயணம்.

மனிதன் தானேதன்னைத் தேக்கிக் கொள்ள சில கட்டுக்களோடுக் கட்டிக் கொள்கிறான். திருமணம். அதனால் இதுதான் எனது குடும்பம் என்று தன்னை முடக்கிக் கொள்ள! வீடு அதைக் கட்டிவிட்டு அந்த ஊரை தனது சொந்த ஊராக்கி அங்கேயே அடைப்பட்டுக்கிடக்க! வேலை, ஒய்வு பெறும் வரை அதே வேலையைச் செய்து செய்து அலுத்துப்போக! இதுபோல் நிறைய யோசித்துப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்னவென்று புரியாமல் நாம் வாங்கிப் பூட்டிக் கொண்ட விலங்குகள்.
நம் வாழ்க்கைப் பயணம் எங்கு தொடங்கியது எனத்தெரியும். ஆனால் எப்போதும் தொடருமா எனத்தெரியுமா? நமது அடுத்த இலக்கு என்ன? அதனை எப்படி அடையப்போகிறோம். அதற்கு நம்மோடு பயணிப்பவர்கள் யார்? அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம்? அதனால் யாருக்கு இலாபம்? என்பதனை அலசிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொருவருமே உங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஒருமுறை ஓடவிட்டுப் பாருங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் இப்போது நிற்கிற இடம் எது? நீங்கள் நினைத்த இடம்தானா? இல்லை. ஏதோ கிடைத்தது அதில் பயணிக்கிறேன் என்பதா? உங்களோடு பயணித்தவர்கள் யார்? யார்? உங்களுக்காகப் பயணித்தவர் யார்? இவரை இன்னும் சில காலத்திற்கு முன்பே சந்தித்திருக்கலாம் என்ற நபர் யார்? இவரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம்! என்பவர் யார்? காரணம் எதுவாக இருக்கும்! ஆய்வு செய்வோம்.
இவர் என் வாழ்வில் எப்படி வந்தார்? யாரெல்லாம் எனக்கு நெருக்கமானவர்கள்? காரணம் என்ன? சாதியா? மதமா? ஒத்த எண்ணங்களா? வாழ்க்கையில் யாரையாவது நமது தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டோமா? வாழ்க்கையில் நாம் யாருக்காவது பயன்பட்டிருக்கிறோமா?

நமது பயணத்தில் நம்முடன் முரண்பட்டு நிற்பவர்கள் யார்? மோதிக் கொண்டு சென்றவர்கள் யார்? கருத்து வேறுபாடுகளால் காணாமல் போனவர்கள் யார்? இப்போது நாம் சந்திக்க நினைப்பவர் யார்? சந்திக்கத் துடிப்பவர் யார்?
எனது பயணம் சுயநலம் நிறைந்ததா? பொதுநலம் நோக்கியா? என்று எண்ணிப்பார்க்கும்போது இங்கு பலர் சுயநல வட்டத்திற்குள்தான், சுருங்கிக் கிடக்கிறார்கள். தன் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டவர் பொறுப்பானவர். பிறருக்காக வாழத்துடிக்கிறவன் பிழைக்கத் தெரியாதவன்.

தனக்கு மட்டும் சேகரித்துக் கொள்கிறவன் சிக்கனவாதி, பிறருக்காக அள்ளி வழங்குகிறவன் ஊதாரி, எத்தனை நாள் இந்தப் பூமியில் இருக்கப் போகிறோம்? எனத் தெரியாமல் ஒரு பணக்காரன் பல ஏழைகளை உருவாக்குகிறான். ஒரு கஞ்சன் பல பிச்சக்காரர்களை உருவாக்குகிறான். ஒரு காமூகன் தன்னுடைய பணத்தாலும், செல்வாக்காலும் பல தாசிகளை உருவாக்குகிறான்.
இங்கு பலரின் பயணம் தன் சுயத்தை வெளிப்படுத்தாமல் நடித்துக் கொண்டு தன்னுடைய ஆசைகளையெல்லாம் அரங்கேற்றிக் கொள்வது! ஒரு துறவியின் பயணம் வேறு. ஒரு வியாபாரியின் பயணம் வேறு. ஆபத்தில்லாமல் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பயணிக்கும் ஒரு மனநலம் குன்றியவனைவிட கூடஇருந்தே குழிபறிக்கிறவனின் பயணம் ஆபத்தானது. பசியில் துடிக்கும் ஒருவனுக்கு உணவளிக்காமல் தன் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசு வாங்குபவர்கள் பாவிகள்.
குடிசையில் கூழுக்கு மனிதன் வழியின்றித் தவிக்கும்போது குடமுழுக்கு, கோபுரம் புதுப்பிக்க பணத்தைக் கொட்டும் சாமியார்களைக் கழுவேற்றிக் கொன்றால் கடவுள் மகிழ்வார். கல்விக்கும், மருத்துவத்திற்கும் காசு வாங்கும் மனிதர்கள்தான் சமுதாயத்தின் விபச்சாரிகள். இதனைச் சரியாகச் செய்பவர்கள் கடவுள்கள்.

நமது பூமிப் பயணம் புனிதமாக இருக்கட்டும். எல்லோருக்கும் புண்ணியமாகவும் இருக்கட்டும். கீதை சொல்வது போல எல்லாம் இங்கேயே கொடுக்கப்பட்டது. இங்கேயே கொடுத்துவிட்டுப் போவோம்! மேடையில் அணிவிக்கின்ற பொருட்களையெல்லாம் முறையாகச் சேகரித்து சொந்த வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தரமற்ற தலைவர்களைப்போல இல்லாமல் நம்மைத் தேடிவந்த பொருட்களையெல்லாம் தேவையிலிருப்பவர்களுக்குத் தேடிக் கொண்டு கொடுத்துவரும் நல்ல மனிதர்களாக நம் பயணம் தொடரட்டும்!
நம்மை அன்பு செய்கிறவர்களுக்கு மட்டுமே அன்பு செய்வது வியாபாரம்! அன்பு செய்யக் கட்டாயப்படுத்தினால் அது விபச்சாரம். முகவரி இல்லாத மனிதர்களைத் தேடி நமது அன்பை அவர்களுக்கு விலாசமாகத் தருவோம்;. அன்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு நம் இதயத்தை இளைப்பாறக் கொடுப்போம். அன்பினால் புண்பட்ட அனைத்து இதயங்களுக்கும் ஆறுதல் அளிக்க மனதால் மருந்து தடவுவோம்.

சாதி, மதம், ஆண், பெண் என்று காரணம் காட்டி அன்பு செய்யத் தடை விதிக்கும் எவனையும் என்ன செய்யத்தோன்றுகிறதோ அதனை துணிந்து செய்யுங்கள். வாழ்க்கையில் நீங்கள் சம்பாதித்தது என்ன என்று கேட்டால்? மனிதர்களை மட்டுமே மையப்படுத்துங்கள். இப்போது உங்கள் சொத்து எவ்வளவு? உங்கள் செல்வாக்கே செல்வம்!
இப்போது உங்கள் பயணத்தை எண்ணிப்பாருங்கள். நீங்கள் வந்தது! நீங்கள் வாழமட்டுமல்ல என்பதனை உணருங்கள். உங்கள் இச்சையைத் தீர்க்க உருவானதுதான் குடும்பம். அதுதான் வாழ்க்கை என்று அறிவிலிகளாக இருந்துவிடாதீர்கள்! வாழ்க்கையின் தத்துவம் என்ன தெரியுமா? நீங்கள் நினைக்கின்ற சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வது! அதனை உங்கள் செயலாலும், வாழ்வாலும் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ள வைப்பது நல்லதாக இருக்க வேண்டும் நல்லவராக இருக்க வேண்டும். அதுதான் உங்கள் வாழ்க்கையின் இரகசியம்.

ஒரு நதி அதன் ஊற்றிலே தங்கிவிட்டால் சாக்கடையாகிவிடும்! ஒரு கனி மரத்திலே தங்கிவிட்டால் அழுகிவிடும். நீங்கள் மட்டும் எப்படி குடும்பத்தோடு மட்டும் வாழ்ந்து…? வாழுங்கள் சுதந்திரமாக…! வாழ வையுங்கள் கடவுளாக…! இந்த மானிடச் சமூகம் பொருளைத்தேடி அலையாமல், உங்களைத் தேடுபவர்களாக உங்கள் வாழ்வு அமையட்டும். இப்போது யாரைத் தேடுகிறீர்கள்? யார் உங்களைத் தேடுகிறார்கள்? எதற்காக…? சமுதாயம் ஏற்றுக் கொள்கிறதா? மரணத்திற்குப் பின்பும் பலர் மனதில் வாழ மகத்தான வாழ்வை அமைத்துக் கொள்வோம் காலம் பதில் சொல்லட்டும்! நம் கல்லறை கோயிலாகட்டும்.
“பயணங்கள்
எதுவாகினும்
பாதைகள்
வரலாறாகட்டும்
பலரையும்
வாழ வைக்கட்டும்!”