பெற்றோர்கள் என்ன…

Posted on : 03-Jun-2026

கொஞ்சக் காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் நிறைய அரங்கேறுகிறது. ஆங்காங்கு எப்போதாவது நிகழ்ந்த சில அசிங்கங்கள் இப்போது ஆங்காங்கே நாள் தவறாமல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்து பலிகொடுப்பது பழக்கமாகிவிட்டது. தூத்துக்குடியில் பற்ற வைத்தது பாண்டிச்சேரியில் பற்றி எரிந்தது. இப்போது கோவையில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் என்ன? மனிதன் மனிதனாக இருந்தால் மனிதாபிமானம் மனதில் குடிகொண்டு இருக்கும். ஆனால் மனிதனாக இல்லை. மனிதன் மிருகமாக மாற்று உரு எடுத்துக் கொண்டு இருக்கிறான். ஆண், பெண் வேறுபாடு அதிகமாகக் காட்டப்படுகிறது. சமுதாயம் ஆணுக்குப் பெண் அடிமை எனக் கற்றுக் கொடுக்கிறது. மதங்கள் பெண்களைத் தீட்டு என்றும், அவர்கள்தான் ஆண்களைக் கெடுக்கிறவர்கள் என்றும், அவர்கள் பொது வெளியிலோ கடவுளுக்கு அருகிலோ வரக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

ஊடகங்கள் பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகவும், அவர்கள் ஆண்களால் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும் ஆண்களின் அதிகபட்ச ஆண்மையே ஒரு பெண்ணைக் காதலில் வீழ்த்தி கல்யாணம் முடிப்பது எனக் கதையளப்பதுதான். ஊடகங்கள் முழுவதிலும் ஊறிக் கிடப்பது உடலுறவுக் காட்சிகள் தானே? நெஞ்சில் நஞ்சைக் கலக்கின்ற நிர்வாணப் படங்கள்தானே!

இன்று சமுதாயம் சரியான சட்டங்களை வைத்திருப்பதாக எண்ணுகிறது. அதாவது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. பொதுவெளியில் இணையத்தளங்களில் நீலப்படங்களை நீந்த விட்டுவிட்டு யாரும் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கிறது. வீதிக்கு வீதி டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துக் கொண்டு குடி குடியைக் கெடுக்கும் என்று கூப்பாடு போடுகிறது. தெய்வங்களை எல்லாம் பெண்ணாக்கி சேலைகட்டிக் கும்பிடுகிற இச்சமுதாயம் நேரில் பார்க்கும் பெண்களை மட்டும் நிர்வாணமாக்கி அனுபவிக்கத் துடிக்கிறது.

ஒரு காலத்தில் திரைப்படங்களில் மட்டுமே கதாநாகனின் தாயையோ, தங்கையையோ, மனைவியையோ, வில்லன் கற்பழிப்பான். உடனே கதாநாயகன் வெகுண்டெழுந்து வில்லனைப் பழிவாங்குவான். இது ஏதோ கற்பனைக் காட்சிகள் போல் தோன்றும். பின்பு நடைமுறையில் ஆங்காங்கே அங்குமிங்கும் இந்தக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியது.

இப்போது காலம் முத்திப் போய்விட்டது. பிஞ்சுகளைக்கூட வேட்டையாடுகிறார்கள். தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட அறியாத வயதுள்ள பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது தாங்கமுடியாத வேதனையாக இருக்கிறது. ஏன் அதைத் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்?

கொஞ்ச காலமாகச் சிறுமிகளைச் சீரழிக்கிற கலாச்சாரச் சீரழிவுகள் கட்டுக்கடங்காமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்தச் சமுதாயம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?

ஒவ்வொரு சிறுமியின் அழிவையும் சீர்செய்ய ஏதோ ஒரு மிருகத்தைக் கைது செய்து கண்முன் காட்டுகிறார்கள். அதற்குப் பின் நடப்பது என்ன? சிறுமிகள், கிழவிகள் என்று கூடப் பார்க்காமல் தன் காமத்தைத் தீர்க்கக் கட்டுகளை மீறி வேட்டைக்கு அலையும் அந்த மிருகங்களின் கோரப் பசிக்குக் காரணம் என்ன?

இந்த மானிடச் சமூகம் தன்னையே அழித்துக் கொள்ளக் காரணம் போதைதான். போதை வந்த பிறகு மனிதன் தன் பாதை மாறிவிட்டான். மனிதன் மனிதனை அழிக்கும் மாபெரும் அழிவுக்குள் மாட்டிக் கொண்டான். இதனால் ஒரு காலத்தில் இருளைக் கண்டு பயந்தவன், கொலைக் கருவிளைக் கண்டு பயந்தவன், இன்று மனிதனே மனிதனைக் கண்டு மிரளும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான்.

மனிதன் மனிதனைச் சிதைப்பது நலிந்து, மனிதனை அழிப்பது, பெண்களைச் சிதைப்பது என உலகம் மாறிக் கொண்டு இருக்கிறது. அதுவும் சிறுகுழந்தைகளைச் சிதைப்பது என்ற கேவலமான நிலைக்கு மானிடச் சமூகம் வந்துவிட்டது ஏன் இந்த இழிநிலைக்கு நம் சமூகம் வந்தது?

மனிதனின் சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் இல்லாத நிலை வந்துவிட்டது. ஒரு குழந்தையானது ஒழுக்கமும், கட்டுப்பாடுடனும் வளரப் பெற்றோர்கள் கவனத்துடனும், சமூக ஒழுக்கத்துடனும் வளர்க்க வேண்டும். பொறுப்பற்ற மனிதர்கள் இங்கு அதிகம் உருவாவதால் இங்கு எல்லோரும் கட்டுக்களை மீறி கட்டுப்பாடுகளைக் கடந்து உலகச்சிதைவுகள் ஒவ்வொன்றையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மானிடம் செத்து மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. மனித வேடங்களில் மிருகங்கள் அலைந்து கொண்டிருக்கிறது.

சிறுமிகளைச் சிரழிப்பது அதிகரித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மனிதன் சந்நியாச வாழ்வு வாழப் பழகுகிற நிலைக்கு வந்து விடுவாhகள் ஆனால் மனிதர்கள் இப்போது உணவுப்பழக்கத்தால், போதைப்பழக்கத்தால், கலாச்சார சீரழிவுகளால், கட்டையில் போகும்வரை காம விளையாட்டு விளையாடுகிறார்கள். போதையின் காரணமாக இவர்கள் இரை எடுக்க எதிர்ப்புத் தெரிவிக்க முடியாத குழந்தையைத் தேடுகிறார்கள். அதனால் குழந்தைகளைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் கசக்கி எறியப்படுகிறது. உடனே பேராட்டம்! நீதி வேண்டும்! என கண்ணீர் விட்டுக் கதறுகிற பெற்றோர்களே! ஏன் தொடக்கத்திலேயே அந்தப் பிள்ளையைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளத் தவறுகிறீர்கள்? குழந்தைகள் இப்போது செல்லை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளின் கையில் செல்லைக் கொடுத்தது யார்? உங்கள் வேலைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக உங்களிடம் இருந்து குழந்தையைப் பிரித்து வைக்க, உங்களுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக நீங்கள் கொடுத்த செல்தானே! இன்று குழந்தை வளர்ப்பில் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது! அது உங்களுக்கு புரியவில்லையா?

தாயின் மடி, மார்பு, தோள்கள், முந்தானை இவை எல்லாம் குழந்தைக்கு உணர்வில் கலந்து உள்ளுயிரில் நிறைந்தது. அதை யார் பிரித்தது? தாய்கள்தானே! செல்லைக் கொடுத்துப் பிரித்தீர்கள்! பாலர் பள்ளிக்கு ஆயாக்களிடம் அனுப்பி வைத்தீர்கள், ஆங்கிலப் பள்ளிக்கு பேருந்தில் அனுப்பி வைத்தீர்கள். திறமைகளை வளர்க்க பல இடங்களுக்கு அனுப்பி வைத்தீர்கள்! இப்படித்தான் ஒவ்வொரு தாய்களும் உங்கள் குழந்தைகளைத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தீர்கள்? இதனால் குழந்தைகள் தங்கள் அருகில் இல்லை தெருவில் கிடக்கிறது எனத் தெரிந்து கொண்ட வெறிநாய்களும் மனித உருவில் காமப்பசியோடு திரிகின்ற தெருநாய்களும் வீதிகளில் திரிவதால் இன்று குழந்தைகளைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறது? இதனையும் சமுதாயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் காவல்துறை, நீதித்துறை, அரசியல்வாதிகள் என்று அவர்களையே சாடிக் கொண்டிருந்தால் குழந்தைகள் சிதைக்கப்படும்போது பெற்றோர்கள் எங்கே பூப்பறிக்கவா போய்விட்டீர்கள்? உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் பொறுப்பு, அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் உங்களிடம் வளரட்டும்! அதுவும் உங்களால் வளரட்டும்! நீங்கள்தான் எல்லாம்! என்பதனை உணர்த்துங்கள். உங்கள் கையில் குழந்தை இருந்தால் எவனாலும் ஏன் எந்த எமனாலும் தட்டிப்பறிக்க முடியாது புரிந்து கொள்ளுங்கள். ஒரு குழந்தையின் பாதுகாப்பு தாயின் மடியும், தந்தையின் கைவிரல்களுமே, அதோடு நடக்கின்ற குழந்தைகளுக்கு ஆபத்து இல்லை. இதனை அப்பா அம்மாக்கள் புரிந்து கொள்ளுங்கள். நம்மை ஆபத்து நெருங்காது.

“நாதியற்ற குழந்தைகள்தான்
வீதியில் கிடக்கும் எந்த
நாய்களும் கடிக்கும்
நமது குழந்தைகள் நமது பொறுப்பு”