மெல்லினம்தான் மேலானதா?…

Posted on : 07-Aug-2026

உயிரினங்களில் ஆண், பெண் என்று இரண்டு நிலைகள் உள்ளது. இதில் மானிடப் படைப்பானது, கடவுள் படைப்பு என்றும், பரிணாம வளர்ச்சி என்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் மற்ற உயிரினங்களிலும் ஆண், பெண் உண்டு அதில் வேறுபாடு இருக்கும், பாகுபாடு இருக்காது. அதாவது அடிமைத்தனம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் தன்னிலை உணர்ந்து, தாழ்வு மனப்பான்மையில் தளர்ந்து, தனக்குள்ளே பயந்து, பயமுள்ள உயிரினங்களோடு பழகும்போது அதற்கு எப்படி? கடிவாளம் இடுவோமோ அதேபோல் பெண்களுக்கு நாம் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொடுத்து அவர்களை அடிமையாக்கத்துடிப்பதுதான் ஆண்களின் பகுத்தறிவா? அல்லது ஆணாதிக்கச் சிந்தனையா?

நடைமுறையில் நாம் பெண்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் உடல்களைப் பற்றி வர்ணிக்கும்போது மென்மையானவர்கள், கொடி, பூ, வாழைத்தண்டு, கன்று, மான், மீன், நிலா என்று மென்மையாகவே வர்ணித்துப் பழகிவிட்டோம். தலைமுடிகள் அதிகமாக வளர்க்க வைத்து அடிமைகள் என்று அறிவித்தோம். அவர்கள் அணிய இறுக்கமான உடைகள் கொடுத்து வேகத்தைக் கட்டுப்படுத்தினோம். உடலை முழுவதும் மூட வைத்து அது வெளிப்படுமோ என்று பயப்பட வைத்துக் கூனிக் குறுக வைத்தோம். கரப்பான் பூச்சிகளுக்குப் பயப்பட வைத்து, நாய்களுக்கு ஒட வைத்து, ஆண்களைக் கண்டால் மிரள வைத்து வீரத்தைக் கட்டுப்படுத்தினோம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற விலங்குகளைப்பூட்டி அடக்கி வைத்தோம். இது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை தெரிந்திருந்தும் இப்படி இருந்தால்தான் நம்மை பெண்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்று நமக்காக நடிக்கிறார்கள். புடவைக்குள் புயலை அடக்கி வைத்து தென்றல் போல நமக்குத் தெரியப்படுத்துவார்கள் இந்தப் புதுமைப் பெண்கள்.

நம்மால் பெண்களை அடக்கி ஆள முடியாது என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்ட ஆண்வர்க்கம் மதத்தைப் புகுத்தி கடவுளை இழுத்து வந்து அவன் இட்ட கட்டளையில் பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மதம் சொல்கிறது கடவுள் முதலில் ஆணைத்தான் படைத்தான். அவனது விலா எலும்பில் பெண்ணைப் படைத்தான். பெண் என்பவள் சாத்தானின் பேச்சைக் கேட்டு ஆணையும் பாவம் செய்ய வைத்து விட்டாள். எனவே அவள் சபிக்கப்பட்டவள் என்கிறது. அவர்கள் எழுதிய மானிட வரலாறு.

ஒரு மதம் இறைவனே இதயத்தில் பாதியைப் பெண்களுக்குக் கொடுத்தாலும் பெண்களில் சபலப்புத்தியாலும் பின்புத்தியின் காரணமாகவும் பல தவறுகளைச் செய்கிறார்கள். அதாவது ஒருத்தி கணவன் இல்லாமல் சூரியனால் கருத்தறித்தாள். கணவனிடம் போட்டியிட்டுத் ஒருவள் தோற்றுப் போனாள் என்று கதை சொல்கிறார்கள். சில மதங்கள், பெண்களும் ஒரு விதமான போதைப் பொருள். எனவே அவர்களது உடல் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டுகிறது. ஆகவே எப்போதும் பெண்கள் தன்னை முழுவதும் மூடிக்கொள்ள வேண்டும். விதவைப் பெண்கள் தாங்கள் அழகைப் புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் வேதத்தைச் சொல்லி பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்தார்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? எதைக் கண்டு பயப்படுகிறோமோ அதனை நாம் அடைத்து வைத்திருப்போம். எதோடு நம்மால் முடியாமல் தோற்றுப் போவோமோ அதனை விலங்கு போட்டு கட்டி வைத்திருப்போம். இப்போது புரிகிறதா? பெண்களுக்கு எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு என்று?

உண்மையில் பெண்கள் சமமானவர்களா? மேலானவர்களா? என்று கேட்டுப்பார்த்தால் என் கருத்தைப் பதிவு செய்கிறேன். உங்கள் முடிவை நீங்களே கூறுங்கள். வலிமையானவர்கள் என்பது எந்த வலியையும் தாங்கிக் கொள்கிறவர்கள்! உண்மையிலே இங்கு ஆண்களே கண்டறியாத வலியான பிரசவ வலியே பெரிய வலியாகும். அதையே ஒவ்வொரு குழந்தைப் பிரசவத்திலும் உயிரைக் கொடுத்து குழந்தையைப் பெறுகின்ற பெண்களின் வலிமையை அந்த வலியை ஆண்களால் தாங்க முடியுமா? வீட்டில் அம்மாவுக்கு உடல்நிலை சரியென்றாலும் கூட அம்மா செய்ய வேண்டிய வேலையை அவள்தான் செய்துகொண்டே இருப்பாள். ஆனால் அப்பாவுக்கு என்றால் குடும்பமே உதவி செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சிறிய வலியைக்கூட தாங்க முடியாமல் தவிப்பது ஆண்வர்க்கம்.

ஒரு பெண் திருமண வாழ்வில் வேறோடு பிடுங்கப்பட்டு மற்றொரு குடும்பத்தில் நடப்படுகிறாள். இருப்பினும் மனைவியாக, மருமகளாக, நாத்தனாராக, தாயார் என எளிதில் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாள். ஆண்களைப் பொறுத்தமட்டில் விடுதியிலோ வேறு ஒரு ஊரிலோ படிக்கும்போது சேர்த்து விட்டாலே அறுத்துக் கொண்டு ஒடுகிற மனநிலையில் வாழ்கிறவர்கள். வீட்டோட மாப்பிள்ளைதான் ஆனால் வெளியே தெரியமாட்டார்கள்!

ஒரு உயிரைக் கருத்தரிக்க, கருப்பையும் உணவூட்ட மார்பகமும் பெண்களுக்கு மட்டுமே உள்ள பெருமைக்குரிய தாய்மையாகும்.

விவிலியத்தில் இயேசுவிடம் ஒருமுறை விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை மக்கள் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பார்கள். ஏன் ஆணுக்குத் தண்டனையில்லையா? என்று கேள்வி எழுவதும் உண்டு. ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது ஒரு ஆண் ஒரு அழகைக் கண்டு மயங்கி அவன் தனிமையில் இருக்கும்போது பிறருக்கு தன்னுடைய அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையால் எளிதில் தவறு செய்து விடுவான். ஒரு நிமிடத்தில் உணர்ச்சி வசப்பட்டுவிடுவான். அவனை மிரட்டி, அடக்கித் தண்டனை கொடுத்து, தனிமைப்படுத்தி! வெறுமைப்படுத்தினால் நிச்சயம் அவனைத் திருத்திவிடலாம். ஆனால் ஒரு பெண் தவறுசெய்யத் துணிந்துவிட்டால்! அவள் தெளிவாகத் திட்டமிட்டு, தீர்க்கமாக முடிவு செய்து எவரையும் எடுத்தெறிந்து, எவர்சொல்லையும் கேட்காமல் துணிந்து விடுவாள்! அவள் மனதில் பலம் வாய்ந்தவள். அதன்பிறகு அவளைத் திருத்தவே முடியாது. எனவே அவள் ஆபத்தானவள். அதனால்தான் அவளைக் கொல்ல வேண்டும் என்கிறார்கள் குடியும் அப்படித்தான் பெண்ணின் மனம் வலிது அதன் ஆழம், அகலம் யாரும் அறியாதது.

வீட்டுவேலைகள் என்று சில உண்டு அது பெண்கள்தான் பார்க்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். வீட்டு வேலைகள் வெளி வேலைகள் எனப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் பெண்களைப் பொறுத்தமட்டில் இரண்டு வேலைகளையும் பார்க்குமளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு பார்க்கவும் முடியாது, பழகவும் இல்லை. எட்டுமணி, பத்து மணிக்கு மேல் இங்கு ஆண்கள் வேலை செய்தார்கள் என்றால் உடம்பு வலி என்றும் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஊளை இடுவது பழக்கமாகிவிட்டது.

குடும்பப் பொறுப்புகளில், திருமண வாழ்வில் ஆண்கள் இறந்துவிட்டாலும் ஒரு பெண்ணால் குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும். குடும்பம் நடத்தவும் முடியும். ஆனால் ஒரு ஆணால் அது இயலாது அவனுக்கு மீண்டும் ஒரு திருமணம் முடித்து குடும்பமாய் வாழ வைத்தால்தான் இல்லையென்றால் அவன் குட்டிச் சுவராகிவிடுவான் என்பது குடும்பத்தின் கருத்து.

விபச்சார விடுதி என்று உண்டு இது எதற்கு? தன்னுடைய உணர்ச்சிகளை தனக்குள் அடக்கத் தெரியாமல் குடும்பங்களை சீரழித்து விடக்கூடாது என்பதற்கு மடைமாற்றம் செய்வதற்காக… எங்கேயாவது தன்னுடைய உணர்வுகளை அடக்கத்தெரியாமல் ஆண்களைத் தேடி அலையுற பெண்கள் உண்டா? ஆண் விபச்சாரர்கள் என்ற அறிவிப்பு உண்டா? பெண்களுக்குக் காமத்தைகூட எளிதில் கையாளத்தெரியும். ஆனால் ஆண்கள் அதில்தான் அழிந்து போகிறார்கள்.

ஆண்கள் பலவீனமானவர்கள்! எளிதில் எதற்கும் அடிமையாகி விடுவார்கள். குடிக்கு அடிமையாவது, குழந்தைகளை சீரழிப்பது, சண்டை சச்சரவுகள், குத்து, வெட்டு என்று அலைவதும் கூத்தடித்துக் கொண்டு திரிவதும் ஆண்வர்க்கம் மட்டுமே! இதைவிடக் கேவலமானது வேறு என்ன வேண்டும்? இவர்களை எப்படிக் குடும்பத்தின் தலைவர்களாக ஏற்பது?

ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து கெடுத்துவிடுகிறார்கள். அதனையும் தாங்கிக் கொண்டு, அதனைத் தாண்டி வந்து, நீதிக்காகப் போராடி, அவள் வெற்றி அடைவாள். ஆனால் ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை… அதற்கு மேல் ஆபாசமாக எழுத விரும்பவில்லை… ஏனென்றால் அவ்வளவுதான் ஆண்கள்! அதற்கு எதற்கு இவ்வளவு அலட்டல்!

ஆண்களை மயக்க வேண்டுமென்றால் பெண்களுக்கு சிறிய ஒப்பனைகள் போதும்! ஆண்களை கெடுக்க வேண்டுமென்றால் சிறிது ஆடை குறைப்புப் போதும். சிரித்துப் பேசிவிட்டாலே சிதைந்துபோய் விடுவார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் அவன் நம்பிக்கைக்குரியவனாக நடக்க வேண்டும். ஆனால் ஆண்கள் முழு ஆடை துறந்தாலும் கடுகளவும் பெண்கள் கவனம் சிதறமாட்டார்கள்!

பெண் எத்தகைய தோல்விகளையும், தாங்கிக் கொண்டு, விருப்பம் இல்லாத செயல் என்றாலும் சமுதாயத்திற்காகச் செய்து கொண்டு குடும்ப நலனுக்காகத்தன்னைத் தியாகம் செய்துகொண்டு வாழ்வாள். ஆனால் ஒரு ஆண் சின்னக் காதல் தோல்வி என்றால் கூட தாடி வளர்த்துத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பான். தண்ணி அடித்துக் குழப்பம் விளைவித்துக் கொண்டிருப்பான்!

ஆண் என்பது இல்லாத ஒன்றைக் கற்பனையாகச் சொல்லிக் கொண்டு தன்னைக் கதாநாயகனாகக் காட்டிக் கொள்வான். பெண் இருப்பதைக் கூட யாருக்கும் தெரியாமல் இயல்பாய் எடுத்துக் கொள்வாள். பெண் மனம் ஆழ்கடலைப் போலச் சலனமற்றது.

சீதை தீக்குளித்தாள், பாஞ்சாலி சபதம் செய்தாள், கண்ணகி சிலம்பொடித்தாள், என்று காவியங்கள் தொடங்கி இன்றுவரை வரலாறுகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆயினும் பெண்கள் அடிமைகள்தான் என்ற ஆணாதிக்கச் சமுதாயத்தைத்தான் இன்றளவும் நாங்கள் எதிர்க்கிறோம்.

எதைக்கண்டு பயப்படுகிறோமோ அதைத்தானே காரணமில்லாமல் நாம் அழிக்க நினைப்போம். அதற்குத்தானே இத்தனை தகிடுத்தத்தங்களையும் செய்து கொண்டு திரிகிறோம்.

மதங்களை வைத்து பெண்களைத் தீட்டு என்று விலக்கி வைத்தோம். அவர்களுக்கு சொத்து உரிமை கொடுக்காமல் சட்டங்களை வைத்துப் பறித்து வைத்தோம். இத்தனை நெருக்கடியிலும் அவர்கள் எழுந்து வந்து கல்வியில் முதலிடத்தில் நிற்கிறார்கள். வேலைகளில் பல இடங்களில் ஜொலிக்கிறார்கள். அடிமைத்தனம் கொண்டு தன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களை விலக்கி வைக்க விவாகரத்துக் கேட்டு வீதிக்குப் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்தியாவின் முதன்மைக் குடிமகள் பெண் என்பதில் பெருமையாக இருக்கிறது, இனியும் நமக்குத்தேவை மண ஒப்பந்தம் அல்ல மன ஒப்பந்தமே! இருவரை இணைப்பது திருமணம் அல்ல புரிந்து கொண்ட இருமனமே!

ஆண்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்றும் பெண்கள் எல்லாம் பத்தினிகள் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் அறுதிப் பெரும்பான்மை மனநிலையை ஆதங்கத்தோடு பகிர்ந்திருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் நேர்மையாய் ஆய்வுசெய்து பாருங்கள் கருத்துக்களைப் பேசுங்கள் ஆனால் மனசாட்சியோடு….

“ஆவதும் பெண்ணாலே
அழிவது நம்மாலே…”