வெங்கடாம்பட்டி வேந்தர்…

Posted on : 25-Jun-2026

பூமிப் பந்தானது கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து, புனிதம் இழந்து, புண்ணியம் இழந்து, வெப்பத்தால் வெந்து, துக்கத்தால் துவண்டு, வியாதிகள் பெருகி, மானிட இனம் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை மாசுபட்டு, இருப்பதைத் தொலைத்துவிட்டு, தன்னையே பூமிக்குத் தந்துவிட்டு, கல்லறைகளில் உள்ள கற்களில் மட்டுமே பெயரோடு இன்றும் பிழைத்துக் கொண்டிருக்கிறான்.

எங்கும் உலகப்போர். எல்லா நாடுகளிலும் உள்நாட்டுப் போர். ஆக மொத்தத்தில் எல்லாம் அக்கப்போர். எல்லா நிலைகளிலும் நாம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இயற்கைக்கும் நமக்கும் எப்போதும் ஒரு போர் நடந்து கொண்டே இருக்கிறது. இயற்கையை நாம் தவணை முறையில் அழிக்க… அழிக்க… அது வாய்ப்புக் கிடைக்கும்போது வந்து தாறுமாறாய் அழித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையைக் காக்க வேண்டுமென்றால் இன்னொரு போர்முறை உருவாக வேண்டும். அதனை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். போகின்ற இடமெல்லாம் பூமி தாவரங்களைக் கருத்தரிக்க வேண்டும். இயற்கை மடியிறங்க வேண்டும் என்ற நோக்கோடு விதைப்பந்து என்ற வீரியமிக்க புதிய அஸ்திரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவர்தான் இந்த வெங்கடாம்பட்டி வேந்தர் திருமாறன் சார் அவர்கள்.

உலகைச் சுருட்டி தன் வாரிசுக்கு உயில் எழுதத்துடிக்கின்ற இந்தச் சுயநலப் பூமியில் இந்த மக்களைத் திரட்டி மக்களின் உயிர்களைக் காக்கத் துடிக்கின்ற ஒரு வித்தியாச மனிதராக இவரை நான் வியந்து பார்க்கிறேன். இந்தப் பூமியை கொஞ்சம் சலவை செய்து புதிய பூமியாக மாற்றி வருகின்ற காலத்தில் சொர்க்கத்தை அனுபவிக்க அவர் கண்டுபிடித்த புதிய விஞ்ஞான முறைதான் இது. இந்த விதைப் பந்து இது பூமியைப் பிளந்து வாழ்கிறவர்களுக்கு வரம் தரும் மரம் செடி கொடிகளை ஈன்று தரும் இன்னொரு சொர்க்கம் அமைக்கும் வித்தியாசமான அணுகுமுறை இது.

இங்கு பொறுப்பான மனிதர்கள் இந்தப் பூமியில் உண்டு. ஆனால் அவர்களுக்கு நாளையைப் பற்றி ஞாபகம் வருவதில்லை. அவர்களுக்கு மத்தியில் அடுத்தத் தலைமுறையைப் பற்றி அக்கறைப்படும் இந்த அற்புத மனிதர்தான் திருமாறன் சார்.

இந்தப் புதிய போர்முறைக்கு இவர் தேர்ந்தெடுத்தத் தளபதிகள் தான் மாணவ மாணவிகள். காலம் முழுவதும் இயற்கையின் மாசுக்களால் பூமி தன் கற்பை இழந்து மண் எல்லாம் மலடாகி.. தாவரங்களே இல்லாத தரிசு நிலமாகி விடக்கூடாது என்பதற்காக விதைப்பந்துப் புரட்சிக்காக அனைத்துக் கல்விக் கூடங்களின் கதவுகளை தட்ட ஆரம்பித்தார். இவருடைய பேச்சும், இவருடைய அணுகுமுறையும், எல்லாக் கல்விக் கூடங்களும் கதவுகளை மட்டுமல்ல தாங்களின் இதயக் கதவுகளையும் இனிதே திறந்து இன்முகத்தோடு வரவேற்றார்கள். இதனால் இவர் தொட்டது துலங்கியது தோட்டமாய் குலுங்கியது.

சதைப் பந்துகளைத் தேடி அலைந்து சமுதாயம் சாக்கடையில் விழுந்து கிடக்கின்ற நேரத்தில் மனிதன் மனது மாசுபட்டுவிடக் கூடாது என்பதற்காக நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதனை அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் மனதில் நடவு செய்கிறார். இயேசு சொன்னார் குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்றார். விவேகானந்தர் சொன்னார் இளைஞர்களை எனக்குக் கொடுங்கள் என்றார். திருமாறன் சார் இருவரையும் கையிலெடுத்தார். இந்தப் பூமி இன்றும் சாகாமலிருக்க விதைப்பந்துகளால் வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார். இவர் நவீன இயேசுவா? கலியுலக விவேகானந்தரா? இரண்டும் சேர்ந்த இனிய கலவை. இலக்கு மக்களுக்கென்று உதித்து வந்த இனிய பிதாமகன்!

இவருடைய வழித்தடத்தில் இவை மட்டுமே பதிவுகள் அல்ல. நீட் தேர்வுக்குப் பயந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிற இளைய தலைமுறைகளுக்கு பல்வேறு நாட்டுத்தலைவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வெளிநாடு சென்று மருத்துவம் கற்று மகத்தான மருத்துவர்களாக வர எண்ணற்றவர்களின் கனவினை எளிதாக்கித் தந்தார்.

புத்தகப் பாடங்களை மட்டும் நம்பி அதில் புத்தர்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிற இன்றைய கல்விக் கூடங்களுக்குச் சென்று புத்தகமும், போதனையும், புத்தனைத் தராது. அறிவியலை அறிவுப் பூர்வமாக அணுகி வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும். வகுப்பறைக்கு வடிகால் அமைத்துத் தருகிறார்.

திறமையானவர்கள் களைத்துப்போய் விடக்கூடாது. உதவி செய்பவர்களை உலகம் அறியாமல் போய் விடக்கூடாது என்பதற்காகத் தேடித் தேடிப் போய் அவர்களைக் கௌரவிக்கும் தெய்வீகக் குணம் படைத்தவர். தன்னை மட்டுமே புகழ்ந்து அலையக்கூடிய தற்குறிகள் பெருகிவிட்ட இந்த தேசத்தில் பிறரைப் புகழும் பெருந்தன்மையை இவரிடம் கற்றுக் கொண்டேன்.

இன்றைய சமுதாயம் சாவிலும், நோவிலும் சங்கடப்படும்போது சொல்ல முடியாத வியாதிகளும் வெல்ல முடியாத மரணங்களும் மனிதனை வேதனையில் ஆழ்த்துகிறது. இதனால் ஏழைகளுக்கு எட்டாத மருத்துவ வசதிகளை கிராமங்களுக்கு அழைத்துச் சென்று முடிந்த வரையில் மரணத்தை வறுமையால் யாரும் வாசலுக்கு அழைத்துவிடாதபடி மருத்துவர்களை அழைத்து வந்து கிராமத்திற்கு சேவை செய்யும் மகத்தான மனிதர்.

காலத்தால் தொலைந்துபோன நமது பாரம்பரியத்தையும், காணக்கிடைக்காத பொக்கிசத்தையும் தேடி எடுத்துப் புதுப்பித்தும் அதனை வெளிநாட்டு மனிதர்களுக்கு வெளிப்படுத்தியும் இந்தியக் கலாச்சாரத்தை இமயத்திற்கு ஏற்றியவர்.

வெங்கடாம்பட்டியில் ஒரு டிரஸ்ட் வைத்து சில குழந்தைகள் சில முதியவர்களை வைத்து பராமரித்து வருகிறார். ஒருமுறை அங்கு சென்று உள் நுழைந்து வெளி வரும்போது அன்னைத் தெரசாளின் அன்பையும் அவள் செய்த பணியையும் அங்கே உணர முடிந்தது. ஐயோ அன்னைத் தெரசாள் மரித்து விட்டாள் என்று நினைத்தபோது பாதி வழியில் மாறன் சாராக வந்துவிட்டாள் என்பது மகிழ்ச்சியே!

அவரோடு பயணித்த சில நாட்களில் என் சிந்தையில் பட்டதை பதிவு செய்திருக்கிறேன். இது மட்டும்தான் மாறன் சார் என்று நினைத்துவிடாதீர்கள். இது டிரைலர் மட்டுமே! மொத்த வாழ்க்கையும் தெரிந்தால் அது நமக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று நினைத்தால் அது நிச்சயம். அறிவாளிகளால் அச்சேற்றப்பட்டு விரைவில் அது வெளிவரும். அதுவரை கிடைக்கும் செய்திகளைச் சுவைத்து முடிந்தவரை பின்பற்றுவோம்.

“வரலாறு என்பது…
பிடித்தவர்களின்
வாழ்க்கை மட்டுமே!”