
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைதான் என்று மார்தட்டியே மண்ணாய்ப்போன இச்சமுதாயம் காலம் முழுவதும் ஆண்களை மட்டும் கையேந்தவே வைத்துவிட்டது. ஆண் என்ற அகந்தையும், குடும்பத்தலைவன் என்ற அதிகாரமும் பெண்கள் கடைபிடிக்கும் பெருந்தன்மையும்தான் இங்கு பல ஆண்களைக் கரை சேர்க்கிறது.
ஒரு ஆணுக்கு தன் வாழ்நாளில் பிறர் துணையின்றி வாழும் கலையை இச்சமூகம் கற்றுத் தருவதில்லை. குறிப்பாக இங்கு பல ஆண்களுக்குச் சமைக்கத் தெரியாது. மனிதன் உணவு உண்பதற்கு எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் பெண்களின் பங்கு பெரும்பங்கு ஆகும். இதனால் முதலில் தாய் பின்பு தாரம், தாரம் இல்லாத கடைசிக் காலத்தில் மகள் இவர்களில் எவரேனும் ஒருவரின் துணை இல்லாமல் எந்த ஒரு ஆண்மகனாலும் வாழமுடியவில்லை. அவர்களுக்குப் பயிற்சியோ வாய்ப்போ கொடுக்கப்படவில்லை.

ஒரு சமூகம் வாழ்வதற்குத் தகுதியானவர்களாகவும், தகுதியுடையதாகக் கருதக் கூடிய பண்புகளையும் நாம் அதிகமாகப் பெண்குழந்தைகளிடம் திணிக்கிறோம். கட்டாயப்படுத்துகிறோம். அன்பு, பண்பு, இரக்கம், அடக்கம், ஒடுக்கம், பொறுமை, கற்பு, நாணம், களங்கம், கண்ணியம், கட்டுப்பாடு என்ற கணக்கற்ற பண்பு நலன்களைப் பெண்களிடையே புகுத்தி கடைசியில் குடும்பக் கௌரவத்திற்காக ஒரு அடிமை வாழ்வு வாழ அன்புக் கட்டளையிடுகிறார்கள். அவர்களும் சகித்துக் கொண்டு தானும் வாழ்ந்து அல்லது துன்பப்பட்டு பிறரையும் வாழ வைக்கிறார்கள். பெண்களின் பொறுமையால்தான் பூமி இன்னும் அழியாமல் சுத்துகிறது.
பெண்களும் அன்பை விட்டுவிலகி வாழ விரும்புவதில்லை. அன்புக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார்கள். அவர்களின் அந்தப் பலகீனமே ஆண்களுக்குப் பலமாக மாறிவிடுகிறது. ஆண்களின் பங்கு உழைப்பது அந்த உழைப்பின் பயனை எடுத்து வந்து குடும்பத்திற்குக் கொடுப்பது அந்தக் குடும்பம் ஒரு பெண்ணின் சிக்கனத்தால் சிறப்பாக ஒளிரும்.

ஆண்களைப் பொறுத்தமட்டில் எந்த வீட்டுவேலைகளையும் அவர்களுக்குக் கற்றுத் தருவதில்லை. இதனால் அவன் வீட்டில் தனியாக வாழ நேரும்போது சுயமாக அவனால் வாழ முடியவில்லை. அதிலும் குறிப்பாக மனைவியை இழந்தபின் ஒரு ஆண்மகன் தன் வாழ்வையே இழந்து விடுகிறான். ஒரு டம்ளர் காபி போட்டுக் குடிக்க முடியாமலும், பிறரிடம் கேட்டுக் குடிக்க முடியாமலும் வீட்டில் எடுத்துக் குடிக்க முடியாமலும் அவன்படுகிற அவஸ்தையும், அவமானமும் ஆயிரம் ஆயுள் தண்டனைக்குச் சமமாகும்.
வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பல பக்கங்களைப் படிக்காமலும், பயிற்றுவிக்கப்படாமலும் வாழ்க்கை முழுவதையுமே ஆண்களுக்கு பெண்களைக் கொண்டு நிரப்பும் புத்தகமாகவே ஆண்களின் அத்தியாயம் ஆகிவிடுகிறது. ஆண்களுக்கு நன்கு சமைக்கத் தெரிந்தாலும் அடுப்பறைக்குப் போக எந்த ஆண்மகனுக்கும் உரிமையில்லையே. அது மனைவிக்கும் மகளுக்கும், மருமகளுக்கும் அல்லவா!… பட்டாப் போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்காகப் பெண்கள் அனுசரித்துப் போகும் சமுதாயம் இருக்கும் வரைதான் இங்கு ஆண்கள் வாழ முடியும். ஒரு ஆணால் ஒரு வீட்டை மட்டுமே கட்ட முடியும். அதனை வீடு என்று சொல்ல வைப்பது பெண்களின் பிரசன்னம்தான். பெண் என்ற ஒருத்தி இல்லாது போனால் அது அந்த வீடு சுடலை குடியிருக்கும் சுடுகாடாய்க் காட்சியளிக்கும்.
ஆண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று வளர்த்து வரும் பெற்றோர்களே! ஆண்களுக்கு பிழைக்கக் கற்றுக் கொடுங்கள். அதனால்தான் அவர்களுக்குப் பெண்களின் பிரிவு பித்துப்பிடித்தது போல் மாறி விடுகிறது. அதனால்தான் ஆண்கள் பெண்களின் பிரிவினால் தாடி வளர்க்கிறான். தண்ணி அடிக்கிறான். தடுமாறி நிற்கிறான். அதோடு அவன் நிலை தடுமாறி அந்தோ பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறான். வாழ்வை இழந்து வழி தெரியாது சிலநேரங்களில் வாழ்வை முடித்துவிடுகிறான்.

காலம் மாறிவிட்டது. ஆண்கள் பார்த்த வேலைகளை எல்லாம் பெண்கள் பார்க்க வந்துவிட்டார்கள். ஆனால் ஆண்களுக்கு பெண்கள் பார்த்த வீட்டுவேலைகளை பகிர்ந்து கொள்ளத் தெரியவில்லையே… பெண்களே! ஆண்களுக்கும் சமைக்கக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் இருவருக்கும் சமமாய் கற்றுக்கொடுங்கள் இருவரும் சமம் என்றும் கற்றுக்கொடுங்கள்.
உலகம் மாறிவிட்டது. நீங்கள் சொன்ன கட்டுக்கதைகள் எல்லாம் சுட்டுப் பொசுக்கிவிட்டது. நீங்கள் சொன்ன கதைகள் கடவுளை வைத்துச் சொன்னீர்கள். அதனால் கண்மூடித்தனமாக நம்பிவிட்டோம். நீங்கள் சொன்ன பொய்யை நீடிக்க விடாமல் செய்வதற்கு இன்று கடவுளையே நாங்கள் கற்பனை என்று கர்சிக்கிறோம்.

கடவுள் முதலில் ஆணைப் படைத்தாராம் கதை விட்டீர்கள். கணவனுக்கு உதவி செய்வதுதான் பதிபக்தி என்று பாசாங்கு செய்தீர்கள் பயந்து விட்டோம். பெண் பாவம் செய்யத் தூண்டுபவள் எனவே ஆடையால் மூடிக்கொள் என்றீர்கள் அடிமையாகினோம். ஆனால் காலம் மாறமாற கருத்துக்கள் மாறுகிறது. கடவுள் இருப்பது உண்மையென்றால் அவர் படைப்புகள் அனைத்தும் சமமாகும் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அனைத்துப் படைப்புகளும் ஏற்றுக் கொண்டாலும் ஆண்களால் மட்டும் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆண்களைப்போல் பெண்கள் வேலை செய்கிறார்கள். ஆடை உடுத்துகிறார்கள் என்று ஆரம்பித்து இன்று கல்வி தொடங்கி அனைத்திலும் பெண்கள் முன்னேறி முதல் இடத்தைப்பிடித்து விட்டார்கள். இனியும் பெண்களை அடிமைப்படுத்த நினைத்தால் அது ஆபத்தானது. அபத்தமானது.

ஆண்களே உங்கள் எண்ணங்களை ஆய்வு செய்யுங்கள் வளர்கின்ற முறையை மாற்றி அமையுங்கள். பெண்களின் முன்னேற்றத்தைத் தாங்க முடியாமல் வக்கிரப்புத்தியால், வன்புணர்ச்சியில் இறங்குகிறார்கள். பெண்களைப் பழிப்பதையே ஆண்கள் பெரும் வேலையாக வைத்துள்ளார்கள். போட்டி பொறாமையால் பெண்களை இல்லாதது பொல்லாதது பேசி இகழ்ச்சிக்கு உள்ளாக்குகிறார்கள். வீட்டிலிருந்து வெளியே வந்து வேலை செய்யும் பெண்களை நமது இச்சையைத் தீர்க்க இழி செயலில் ஈடுபடுகிறார்கள். கற்பைப் பத்திப் பேசிப் பேசி அவர்களைக் களங்கப்படுத்துகிறார்கள். பெற்றோர்களே இதனையெல்லாம் கவனத்தில் வைத்து பிள்ளைகளை வளர்த்தெடுங்கள்.
ஆண்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம். அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுங்கள். இது பெண்கள் ஆண்களைப்போல் அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும்போது பெண்கள் செய்யும் வேலை என்று ஒதுக்காமல் அனைத்துப் பயிற்சிகளையும் எடுக்கச் சொல்லுங்கள். அனைத்திற்கும் பெண்களை எதிர்பார்த்து நிற்கின்ற அவல நிலையை மாற்றச் சொல்லும் சார்ந்து இருக்கும் சூழ்நிலை வரும்போது கேட்டு வாங்கச் சொல்லுங்கள் அதிகாரம் வேண்டாம்!

வயதான காலத்தில் தனிமையில் வளரும் ஆண்களின் அவல நிலையைப் பாருங்கள். உயிரோடு நரகத்தில் வாழும் மனிதர்கள் ஆண்கள் மட்டுமே இதனை அதிகமான ஆண்கள் கூட உணரவில்லை. வயதான பிறகு சொர்க்கத்தில் வாழ வேண்டுமா? வாழ்க்கைத் துணை வேண்டும்! இது எத்தனைபேருக்கு வாய்க்கும்? எனவே எச்சூழலில் எவர் தயவும் இன்றி ஆண்களுக்கு வாழக் கற்றுக்கொடுங்கள். அப்படி வாழக் கற்றுக் கொடுத்துவிட்டால் அதுதான் வரம் இல்லையென்றால் சாபம்.
பெற்றோர்களே நீங்கள் இல்லாதபோதும் உங்கள் பிள்ளை இன்பமாக வாழ வேண்டுமென்றால் எதற்கும் எவரையும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக் கொடுங்கள். சொந்தக் காலில் நிற்கும் சூத்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள் ஆண் என்ற ஆதிக்கமும் வேண்டாம் பெண் இல்லையென்றால் பிச்சையெடுக்கவும் வேண்டாம் எல்லோரும் எனக்கு நண்பர்களே! எனது இல்லத்து அரசியும் கூட…! பெண்களும் ஆண்களும் கோவிலும் சாமியும் போல்! கோவில் இல்லாத சாமி காக்கை எச்சத்தால் களங்கப்படும். சாமி இல்லாத கோவில் மண்டபமாகிவிடும் இருவரும் சமமானால் எதுவும் நடக்கும்.
“பெண்களை எதிர்க்கத்
துணிவில்லாதவர்கள்
விமர்சனத்தால் அவர்களை
வீழ்த்தத் துடிக்கிறார்கள்”