30

Dec

2013

கிறிஸ்து பிறந்த திருநாள்

யாரில் பிறப்பாய்?
என்னில் பிறப்பாயா
எம் மண்ணில் பிறப்பாயா
எத்தனை எத்தனை ஆசைதான்
எம்முள்ளே, எம்முன்னே
அத்தனை ஆசையும் அய்யனே
சுயம் காக்க கொண்ட ஆசையே

	அன்று பிறந்த நீ
	பொதுவாகத்தானே பிறந்தாய்
	பெற்றவளிட்த்தும்
	பொறுப்பாய் வளர்த்தவரிடமும்
	சொல்லாமல்தானே
	பொதுப்பணிக்கு சென்றாய்
	என்னில் பிறந்தாலும்; இதுதானே
	ஆனாலும் பிறந்து வா
	என்னில் அல்ல, எம்மில்வா
	எம்மை பிறக்க வைக்க வா

எம்மில் பிறந்தாலும்
எங்கே பிறப்பாய் என
சொல்லி விட்டு வா
எனென்றால் - அன்று
ஒரே ஒரு எரோது
உன்னைக் கொல்ல
ஒரு லட்சம் குழந்தைகளை
கொன்று குவித்தான்
ஆனால் இன்று
ஒரு லட்சம் ஏரோதுகள் உலகில்
உன்னைக் கொல்ல

	ஈழத்தில் நீ பிறந்தால்
இனப் படுக்கொலை
ஏழை குடிசையில் நீ பிறந்தால்
வறுமை கொலை
சாதியில் நீ பிறந்தால்
சாதியக் கொலை
உயர்சாதியில் நீ பிறந்து
வேறுபாடுயின்றி வாழ்ந்தால்
கவரவ கொலை
துறவறத்தில் நீ பிறந்தால்
ஏரோதிய கொலை
ஆண்hய் பிறக்க வேண்டாம்
என நீ நினைத்து
பெண்ணாய் பிறக்க நினைத்தால்
நித்தம் நித்தம் கொலை

பிறப்பில்
கள்ளிப் பால் கொலை
வளர்ப்பில்
ஆண் - பெண் வேறுப்பாட்டு கொலை
பள்ளி – கல்லூரியில்
காதல் கொலை
தெருவில்
கயவர்கள் கொலை
அலுவலகத்தில்
அதிகாரம் கொண்ட கொலை
கல்யாணத்தில்
வரதட்சணை கொலை
கணவனிடத்தில்
சந்தேக கொலை
மாமியரிடத்தில்
அதிகார பகிர்வு கொலை
பிள்ளைகளிடத்தில்
உறவு பிரிவு கொலை
வயது போக போக
முதுமை கொலை
இப்படி கொலை செய்ய
ஏரோத – எரோதிகள்
எத்தனையோ பேர்
எங்களிடத்தில்

இத்தனையும் கடந்து
பிறப்பாயா இல்லை
பிறப்பே வேண்டாமென்று
இருப்பாயா
நீ பிறந்திடு
எம் மண்ணில்
மானுடம் கொண்ட மக்கள்
மாண்பு பெற்றிட
இல்லாமை
இங்கு இல்லாது போகிட
சமத்துவம் தளைத்திட
சகோதரத்துவம் உயர்ந்திட
நீதி செழித்திட
நேர்மை துலங்கிட
சாதியம் சரிந்து போக
உண்மை உயிர்பெற்றிட
மனச்சாட்சி கொண்ட
மானிடம் மண்ணில்
பிறந்திட!
எம்மில்
எம் உள்ளித்தில்
குழந்தையாய்
பிறந்துவா!
நாங்கள்
புதிய பிறப்பாய்
பிறந்திட....

ARCHIVES