05

Sep

2013

ஆசிரியர்தினம்

தன்னுடையமகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித்தலைமை ஆசிரியருக்கு ஆப்ரகாம் லிங்கன் எழுதியகடிதம்….

எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்ல அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன், ஆனால், அதேசமயம் ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும், ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். இது கடினமானகாரியம் தான் எனினும் உழைத்துப் பெற்ற ஒரு ரூபாய், சாலையில் கிடைத்த நூறு ரூபாயைவிடப் பல மடங்கு மதிப்புமிக்கது என்பதையும் உங்களால் முடிந்தால் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தோல்வியிலிருந்து படிப்பினை பெறவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். பொறாமையில் இருந்து விலகி நிற்க அவனுக்குப் பயிற்றுவியுங்கள். ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தால் வாழ்வு இன்பத்தைத் தரும் என்பதைஅவனுக்குஉணர்த்துங்கள்.

புத்தகங்களில் பொதிந்துள்ள அற்புதங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே சமயம் நீல வானத்தில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் புதிரையும், சூரிய ஒளியில் கண்சிமிட்டும் தேனீக்களின் சுறுசுறுப்பையும், பச்சைப்பசேல் என்ற மலைப்பரப்பில் விரிந்து பரந்திருக்கும் பூக்களின் மலர்ச்சியையும் ரசிக்க–சிந்திக்க அமைதியான நேரத்தையும் அவனுக்கு அளியுங்கள்.

பள்ளியில் ஏமாற்று வதைவிட பெயிலாவது பல மடங்கு கண்ணியமானது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். மற்றவர்கள் அனைவரும் தவறு என்று தகிடுதத்தம் செய்தாலும் தனது எண்ணங்கள் சரியானவை என்று உறுதிகொள்ளும் அளவுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.

இன்னும் மென்மையானவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், முரடர்களிடம் அதற்குத் தக்கபடி நடந்துகொள்ளவும் சொல்லிக் கொடுங்கள். கும்பலில் கோவிந்தா சொல்வது போல் அல்லாமல் சுயமாகச் சிந்திக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எல்லா மனிதர்களின் கருத்துக்களையும் உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்லுங்கள் ஆனால், அவன் செவிமடுக்கும் அனைத்தையும் உண்மை எனும் உரைக்கல்லில் உரசிப் பார்த்து நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை அவனுள் ஏற்படுத்துங்கள்.

துன்பம் மேலிடும்போது, மனம் கனத்துப் போகும்போதும் சிரிப்பது எப்படி என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர்த் துளிகள் இழிவு இல்லை என்பதையும் அவனுக்குச் சொல்லுங்கள்.

சிற்றின்பம் என்னும் சேற்றில் மூழ்கிடாமல் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள். தனது அறிவையும் பலத்தையும் பொருளீட்டப் பயன்படுத்தும் அதே சமயத்தில் ஒருபோதும் எனது இதயத்திற்கும்,மனசாட்சிக்கும் ஒரு நிலை நிர்ணயித்துவிட வேண்டாம் என வலியுறுத்துங்கள்.

கூக்குரலிடும் கூட்டத்தினரின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தன் காதுகளைப்பொத்திக் கொண்டு பொறுமையுடன் இருக்கவும், சரியானது என்று தான் அறிந்து கொண்டகொள்கைகளுக்காகத் துடிப்புடன் எழுந்துபோராடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அவனை மென்மையாகவே நடத்துங்கள். ஆனால் ரொம்பவும் ஆரத்தழுவி செல்லங்கொடுத்துவிட வேண்டாம். ஏனெனில் நெறுப்புப் பிழம்புதான் உறுதியான எக்கை உருவாக்குகிறது. பொறுமையாக இருப்பதற்கு வேண்டிய துணிச்சலையும், துணிவாக இருப்பதற்கு வேண்டிய பொறுமையையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

தன் மீது அபரிமித நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் மனிதகுலம் மீதும் அவன் அபரித நம்பிக்கை வைத்துக்கொண்டிருப்பான்.

இவ்வாறு நான் தங்களிடம் கேட்டுக்கொள்வதுமிக்க கடினமான காரியம்தான். உங்களால் முடிந்ததைச் செய்து என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள். ஏனெனில் எவ்வளவு நல்ல பொடிப்பயல் என் மகன்.

இப்படிக்கு
 ஆப்ரகாம் லிங்கன்

ARCHIVES