12

Jan

2022

என்ன கருமமடா இது!?

சமீப காலமாக பல்வேறு பரபரப்பானச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் பத்திரிக்கைகள் நம்மிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது. சிலவற்றைக் கடந்து செல்கிறோம். சிலவற்றைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம், வியக்கிறோம் தடுமாறுகிறோம், விமர்சிக்கிறோம். அரண்டு முழிக்கிறோம். அசந்து விழிக்கிறோம். அதுவும் இந்தியாவிலா இப்படி ஒரு கொடுமை என்று வியக்குமளவிற்கு இல்லை… இல்லை வெறுக்குமளவிற்கு உள்ள செய்தி மலையாள நாட்டில் மாட்டிக் கொண்டு தவிக்கிற மனைவிகளை மாற்றி இன்பம் அனுபவிக்கிற இகழ்ச்சிச் செயல். இதனைக் கருமம் என்று சொல்வதா? கண்றாவி என்று அழைப்பதா? கேட்டால் ஒரு பதில் இது கலிகாலம் என்று சொல்லுவார்கள்.

இந்தியாவின் கண்ணியமே, சுயமரியாதையே ஒருவனுக்கு ஒருத்தி ஆனால் இறைவனின் தேசம் என்று அழைக்கப்படுகின்ற கேரளாவில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மனைவிகளை மாற்றி தாம்பத்திய உறவு என்று ஒரு கும்பல் செயல்படுவதாகவும், அது காவல்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி பரவி பரபரப்பாக்கியது. இது ஏதோ காது வழிகேட்டு கடந்துபோவதாக எண்ணினேன். ஆனால் கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதுபோல தோண்டத் தோண்ட பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் கண்ணியத்தைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மானத்தையும் ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாக்கி நாசமாக்கிவிட்டது!.

தம்பதிகள் என்பது தன்னுடைய பதி. புதி என்றால் கணவன் அல்லது தன்னில் பாதி சிவனையும், பார்வதியையும் இப்படித்தான் சித்தரிப்பார்கள். ஆணும், பெண்ணும் ஒவ்வொருவரும் தன்னுள் பாதியாகவும் மற்றவர் மீதியாகவும் தம்பதிகள் என்ற ஒரு தெய்வீக வாழ்க்கையை அறவழியில் நடத்திய நாட்டில் இந்த அசிங்கம் எப்படி அரங்கேறியது? கணவன் இறந்தபின்பு உடன்கட்டை ஏறியது காட்டுமிரண்டித்தனமாக இருந்தாலும் அதற்குள்ளும் ஒரு கண்ணியம் ஒளிந்திருக்கிறது அல்லவா! கணவனை இழந்தவர்கள் தாங்கள் கற்பினைப் பாதுகாக்க கோவில்களுக்குச் சென்று தேவதாசியாகப் பணியாற்றி இறுதிகாலம் வரை புண்ணியம் தேடினார்களே!

அதற்காக ஆதிக்காலம் கண்ணியமாய் இருந்தது. மீதிக்காலம் சூன்யமாகிவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆதிக்காலத்திலும் அந்தப்புரங்கள் இருந்தது. தேவதாசிகள் முறை இருந்தது. விபச்சாரங்கள் நடைபெற்றது. ஆனாலும் இவையெல்லாம் அபச்சாரங்கள் என்று ஒதுங்கி கண்ணியமான வாழ்ககை நடத்தினார்கள்.

சின்னவீடு வைத்திருந்தவர்களும் உண்டு. ஆனாலும் அவர்கள் மதிப்புமிக்கவர்களாக நடத்தப்படவில்லை. பணம் செல்வாக்கால் பற்பல மனைவிகளோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் தனிமனித ஒழுக்கத்தால் தோற்றுப் போவார்கள். தனக்குரிய கௌரவத்தை இழந்தும் போவார்கள்.

தாம்பத்தியம் என்பது உடலோடு உடல் உராய்வதல்ல. மனசோடு மனசு மயங்கி நிற்பது. மண்ணில் நடைபெறும் மாபெறும் தெய்வீகம். இதனை புரிந்து கொள்ளாதவர்கள் மானிடப் பிறவிகள் அல்ல. தாம்பத்தியம் என்பது விலங்குகள் வேட்டையாடுவது போல் வீட்டுக்குள் நடக்கும் குடும்ப வன்முறையல்ல. ஒரு பக்தனுக்கும் தெய்வத்திற்கும் நடக்கும் ஆலோப அர்ச்சனையாகும். இத்தெய்வ தரிசனத்தில் ஒரு பக்;தனும் ஒரு தெய்வமும் பள்ளி கொள்வதுதான்.

இரண்டு உயிர்கள் அன்பு செய்யும் போது அது ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டால் தன்வயப்படுத்திக் கொள்ள தான் எடுக்கும் அன்பின் அடையாளங்கள் ஆயிரம் ஆயிரம். பொருள் கொடுப்பது, பொழுதைக் கொடுப்பது, ஆறுதல் கூறுவது, மடியில் அழுவது, மார்பில் தஞ்சம் அடைவது, உச்சி முகர்வது, உள்ளங்கையைப் பிடிப்பது, கட்டியணைப்பது, காதுவழி இரகசியம் சொல்வது, கண்ணீர் துடைப்பது தலையைக் கோதிவிடுவது தொட்டுக் கொண்டே பேசுவது இதற்கு மேலும் தன் இத்தரணியில் பிடித்த ஒரு ஜீவன் இதுதான் இது தனக்குத்தான் தனக்கு மட்டும்தான் என்று எண்ணித் தன்னையே தாரை வார்த்துக் கொடுப்பதுதான் தாம்பத்தியம் ஆகும். அது ஏதோ விளையாட்டுப்போட்டியில் களைப்பு வந்தவுடன் கலைந்து ஓடுவது அல்லது இச்சை தீர்ந்தவுடன் எட்டிப்படு என்று சொல்வதும் காட்டுமிராண்டித்தனமே தவிர கண்ணியமானவர்கள் செயல் அல்ல. ஒரு கோவிலின் கற்பக்கிரகத்திற்கு சமமானது அங்கு தம்பதிகள் தான் தெய்வங்கள் கொடுப்பதும் எடுப்பதும் அவர்கள் மட்டுமே அறிந்த தெய்வீகம்.

இப்படி கண்ணியமிக்க நாட்டில் வாழும் நம்மையே வெளிநாட்டுக்காரர் ஒருவர் விமர்சிப்பார் நமது திருமண முறையை முன்னப் பின்னப் பார்க்காமல் முழுசாக அறியாமல் விருப்பு வெறுப்புத் தெரியாமல் வேண்டுவது கூடப் புரியாமல் யாரோ பெண்பார்ப்பார்கள் கல்யாணம் முடியும் காலையில் கைபிடித்துக் கொடுத்து இரவினால் முதலிரவென்றால் இதனை என்னவென்று சொல்வது இதுவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் தானே எனக் கூறுவார். அதுவும் ஒருவகையில் உண்மையாகத்தான் தெரிகிறது.

இப்போது தெய்வீகத்தனம் தேய்ந்துவிட்டது. தீராத அன்பும் ஒய்ந்துவிட்டது. காதல் திருமணம் என்ற பெயரில் காமம் தனது சடுகுடு ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது. உடல்கவர்ச்சி ஒய்ந்தவுடன் விலகி ஒடுவது, வெறுப்பை உமிழ்வதும் இருப்பதனால் விபச்சாரம் பெருகிவிட்டது. கள்ள உறவு கடைச்சரக்காகிவிட்டது. குழந்தைகளைக் கூட வேட்டையாடுகின்ற மனித மிருகங்கள் நடமாடும் காட்டு தர்பார் ஆகிவிட்டது. கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொல்லுகின்ற மலிவுப்பத்தினிகள் மார்தட்டிக் கொண்டு திரிகிறார்கள் பலரை ஏமாற்றித் திருமணம் செய்து பணம் பறிப்பதும் விட்டுவிட்டு ஓடுவதும் அங்கீகரிக்கப் படாத தொழிலாக அரங்கேறி வருகின்றது. சாமியார்கள் எல்லாம் சல்லாபத் தொழிலில் சமரசமாகிக்கிடக்கிறார்கள். ஐந்து புருசனைக் கடந்தவர்கள் எல்லாம் அவதாரமாகத் தன்னைக் கூறிக் கொள்கின்ற அக்கிரமங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்ற இதனையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டாமா? அவசியம் செய்வோம் வாருங்கள்.

இப்படியே போனால் இளையத்தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது யார்? எடுத்துச் சொல்வது யார்? புத்தர் பிறந்த புண்ணிய பூமி இது அன்னைத்தெரசாள், அப்துல் கலாம் வாழ்ந்த நாடு கண்ணகி கோவில், சாவித்திரி சபதம், சீதையின் தீக்குளிப்பு என்ற புண்ணிய தேவதைகள் பூமியில் தோன்றிய தேசம் ஆகவே இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும் எடுத்துக்காட்டாய் வாழவும் கடமைப்பட்டுள்ளோம். வந்தோம் போனோம் அல்ல நமது வாழ்க்கை வாழ்ந்தோம் வாழ்வைத் தந்தோம் வாழ வைத்தோம் என்பதுதான் வாழ்க்கை. காலம் குறுகியது கண்ணியமாக வாழ்வோம். வெறும் புண்ணியமாகப் போகட்டும் யாரை எடுத்துக்காட்டாய் இளைய தலைமுறைக்கு கூறுவதற்கு நான் இருக்கிறேன் என் மார்தட்டும் அளவிற்கு மாண்போடு வாழ்வோம். வாருங்கள் கைகோர்ப்போம் வாழ்ந்து காட்டுவோம்.

“இதயத்தில் நான்கு அறைகள்
தேவதை ஒன்றுதான்”

ARCHIVES