கேள்வியில் பிறந்தவேள்வி?

கேள்வியில் பிறந்த வேள்வி?

MKGandhi

( நாட்டின் நடப்புக்களும் நான் காணும் அவலங்களும் நாம் வாங்கிய சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டோமா? அல்லது வாங்கி விட்டோம் என்ற வதந்தியைப்பரப்பி விட்டோமா? புரியாததால் எழுந்த கேள்வியின் வேள்வி இது)

              ஓ மகாத்துமாவே உனக்கும்
பொய் சொல்லத் தெரியுமோ?
சுதந்திரம் வாங்கி விட்டோமென்று
சும்மா தானே சொன்னாய்!

ஓட்டைக் குடிசைக்கும்
உத்திரவாதம் இல்லாது
மாற்றத் துணியின்றி
வேற்றுடையும் இல்லாது,

              காலமெல்லாம் உழைத்து
கஞ்சிக்கே வழியில்லாத
பாமரனுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

சிவகாசிக்குப் பறக்கப்பட்டு
சிறகுகள் ஒடிக்கப்பட்டு
கருவறை விட்டு வந்து
தொழிற்சாலையைத்தொட்டிலாக்கி,

              பள்ளிக் கூடங்களே
பகல் கனவாய்ப்போன
பாலர்களுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

ஓ மகாத்துமாவே உனக்கும்
பொய் சொல்லத் தெரியுமோ!

நாட்டை நந்தவனமாய்
நம்பி வந்த சாமியார்கள்
காட்டை அந்தப்புரமாக்கி
கன்னியர்களைக் கருவறுக்கும்

              அர்ச்சனையை அசிங்கமாக்கி
அக்கிரமத்தை அரங்கேற்றும்
அயோக்கியர்களுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

இறைவனேமனித அவதாரம்
எடுத்து வந்தகாலம் போய்
மனிதனே இறைவனாக
மாறுவேடம் போடுகின்ற

              மட்டரக அரசியலுக்கு
மணிமகுடம் சுட்டுகின்ற
மடையர்களுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

சுதந்திரம் வாங்கி விட்டோமென்று
சும்மா தானே சென்னாய்!

பள்ளிக்கு அழைத்து வந்து
பள்ளியறையில் கசக்கிவிட்டு
துள்ளித் திரியும் வயதில்
கொள்ளிவைத்து அடக்கிவிட்டு

சல்லிக் காசுகளை எறிந்து
சட்டத்தை அமுக்கிவிடும்
சாமான்யர்களுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

தாய்மைக்குப்பேரம் பேசி
தன் மகனை பணயம் வைத்து
தங்கத்தில் குறைவு என்றால்
அங்கங்கள் சிதைக்கப்படும்

பெண் குழந்தை பிறப்பதென்றால்
கருவறையே கல்லறையாகும்
கல் நெஞ்சர்களுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

ஓ மகாத்துமாவே உனக்கும்
பொய் சொல்லத் தெரியுமோ!

காடுவித்து மாடுவித்து
கல்லூரிக்குஅனுப்பிவைத்து
கல்வியைப்பறக்கவிட்டு
கருப்பையை நிரப்பிவிட்டு

கோர்ட்டுக்கும் வீட்டுக்கும்
குடித்தனம் நடத்துகின்ற
கோமாளிகளுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

கைதியாய் அழைத்து வந்து
கயிற்றினிலே தொங்கவிட்டு
கைபிடித்த மனைவியையும்
காவல் நிலையத்தில் ருசித்துவிட்டு

சட்டத்தை விற்றுவிட்டு
சவங்களுக்கு காவல் நிற்கும்
சந்தர்ப்பவாதிகளுக்கு எப்போது
சுதந்திரம் வாங்கித் தந்தாய்?

ஓ மகாத்துமாவே உனக்கும்
பொய் சொல்லத் தெரியுமோ!
சுதந்திரம் வாங்கி விட்டோமென்று
சும்மா தானே சொன்னாய்?